A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Sunday, November 24, 2013

யார் இந்த பொன்ராசா?


பொன்கொடுத்த பொன்ராசா

இப்போதும் அழுகிறான்

மண்போனது கவலையில்லலையாம்

தன்பவுண்  கேட்கிறான்

 

புலி வீழ்ந்த இடத்தில்

புல் முளைத்துவிட்டதாம்

பூங்கா கட்ட காசு கேட்கிறான்

மாவீரர்களுக்கு பூமாலை கட்டித் தருவானாம்

 

ஐக்கிய இலங்கைக்குள்

ஆயிரம் தீர்வாம்-கை

நக்கிய படியேமேலே வரலாமாம்

ஈழம் என்பது கோலமாம்-இது

கனகாலமாய் அலங்கோலமாம்

 

பொன்ராசாவுக்கு

ஃபெடரல் சிஸ்ரம் பிடிபடவில்லை

கேட்டால் பின்நாளில் பார்க்கலாம் என்கிறான்

ஏ9 வீதியைப் பார்த்து  ஏமாந்து போய்விட்டான் போலும்

 

ஈழம் எனப்படுவது எம்தேசமல்ல

எங்கள் ஜீவன் என்றேன்

ஜீவன் உயிரைவிட மேலென்றேன்

 

பொன்ராசா,

ஒற்றை ஆட்சி ஒன்றுதான்

எங்களுக்கு மீட்சியாம்-அதற்கு

எஞ்சிய சனம்தான் சாட்சியாம்

கஞ்சியாவது குடித்தால் போதுமாம்

 

அப்படியென்றால்

ஈழம் என்ன எட்டாப்பழமா? என்றேன்

ஈழம் அதெல்லாம் எட்டப்பன் இருக்கும்வரை

கிட்டாது என்றான் அவன்

 

மீண்டும்,

ஈழம் எனப்படுவது எம்தேசமல்ல

எங்கள் ஜீவன் என்றேன்

ஜீவன் உயிரைவிட மேலென்றேன்

 

பொன்ராசா சிரித்தபடி சொன்னான்,

ஈழம் எனப்படுவது நமது சாபம்

இந்தியா இருக்கும்வரை நமக்கது பாவம்

எதற்கடா தம்பி நமக்கு முற் கோபம்

 

பொன்ராசா,

ஈழம் என்பது நம்தேவை

முடிந்தால் செய்சேவை

இல்லையேல் அடக்கிவை உன்நாவை

 

மேலும் சொன்னேன்,

செல்வாவின் கொள்கை ஈழம்

அவர்சிந்தனை மிகப்பெரிய ஆழம்

பிரபா போட்டார் பெரிய பாலம்

அதைவிடாமல் பிடித்தால் லாபம்

 

பொன்ராசா நக்கலாய் சொன்னான்,

மக்களிற்கு தேவை

சினிமாவும் சீனி-மாவும்

தலைவர்களிற்கு தேவை

நாற்காலியும் நாட்கூலியும்

 

பொன்ராசா,

தவளையாய் இருந்து தத்துவம் பேசாதே

கவலையாய் கிடந்து காலத்தை நோகாதே

கீழ்நோக்கி நடந்து மேல்நோக்கி பார்
 

வானத்தை வசப்படுத்த உனக்கு கானமயில் தேவையில்லை

ஈழத்தை பலப்படுத்த உனக்கு இனியாரும் தேவையில்லை

 

மெல்ல எழுந்து நடந்தேன்……

காலோடு சேர்ந்து மனசும் வலித்தது…..

 

நன்றி,

Saturday, November 16, 2013

முள்ளிவாய்க்கால் முற்றம் அதிலென்ன குற்றம்


இடித்தவன் தலையில்

இடி வீழாதோ-சிறை

பிடித்தவன் அரசின்

முடி தாழாதோ?

 

படைத்தவன் இல்லையோ-இல்லை

பார்ப்பனர் தொல்லையோ

உடைத்தவன் உதிரத்தை

குடித்தால் தகுமோ?

 

அம்மா..

முற்றத்தை இடித்தாயோ–உன்

முகத்திரையை கிழித்தாயோ?

சுற்றத்தை வெறுத்தாயோ-உன்

சுகத்தை நினைத்தாயோ?

 

முந்தானை விரித்து-அரசியலில்

முன்னுக்கு வந்தவரே

முள்ளிவாய்க்கால் முற்றமென்ன

மு.க.வின் மாளிகையா?

 

பல் இளித்து பாவாடை குறுக்கி

சினிமாவில் வென்றவரே

முள்ளிவாய்க்கால் முற்றமென்ன

சினிமா செற்றா

 

அம்மா

வாஸ்த்து பார்த்தீரோ

வைகோவை வாயடைக்கப் பார்த்தீரோ

நுனிநாக்கால் தீர்மானம் போட்டுவிட்டு

சனிநாக்கால் தமிழ்மானம் கெடுத்தீரோ

 

பார்ப்பனரே…

பல்லக்கில் பவனிவந்த

தமிழன் இன்று

உங்கள் சொல் கேட்டு

பள்ளத்தில் வீழ்ந்தானே

 

முல்லைக்குத் தேர் கொடுத்த

தமிழ் வம்சத்துப் பெண்பிள்ளைக்கு

முள்ளிவாய்க்காலில் மூடிமறைக்க

ஒருதுண்டு துணியில்லை

 

வாழ வழியின்றி வந்தேறு குடிகளிற்கு

வீடுநிலமும் விதைநிலமும்

கொடுத்த தமிழனுக்கு

நினைவுக்கல் நாட்ட நிலமில்லை

 

நன்றி.

Friday, August 2, 2013

சந்திப்பு


ஒரு வாரமாக அவள் சந்தித்த மனிதர்களும், அவர்கள் வாழுகின்ற வாழ்க்கையும் அவளுக்கு புதிய உலகம் ஒன்றை கற்பித்துக் கொண்டிருந்தது. எல்லா மனிதர்களும் ஏதோ ஒருவகையில் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என எண்ணத் தோன்றியது. அதிக எதிர்ப்பார்ப்புக்கள் இல்லாத அந்த வாழ்க்கை முறை பற்றி ஆயிரம் எண்ண அலைகள் மனதை நனைக்க கடற்கரை ஓரமாக நடந்து வந்தாள்.

ஆயிரம் ஆயிரம் அலைக் குழையல்கள் தமக்குள் கைகோர்த்து கூட்டாக தன்னை நோக்கி ஓடி வருவதைப்போல இருந்தது அவளுக்கு. அந்த அலைகள் திட்டமிட்டே அவளின் பாதங்களை நனைத்து விட்டு ஓடி ஒளிவதைப் போல அவள் மனம் எண்ணி நகைத்தது. மாலையில் வீசிய கடற்கரை காற்றும் அவளைத் தீண்ட, காதல் வயப்பட்ட மனசைப் போல அவள் மனம் ரம்மியமடைந்தது. கடல் அலைகளின் அழகில் மயங்கித்தான், சூரியன் குளிர்ச்சி அடைவதாக சில கணம் எண்ணிக் கொண்டாள். அந்த அழகிய பீச்சில் நிற்கின்ற எல்லோரும் நீண்ட நாள் சோர்விற்கு பின்னால் புத்துணர்ச்சி பெறுவதைப்போல விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

          சிறகுகளை அசைக்காமல் பறவைக் கூட்டங்கள் உயரப் பறக்கின்றன; சூரியன் மஞ்சள் காமாலை நோய் போல இள மஞ்சளாகிறது;. கொஞ்ச நேர சுகத்திற்காய் தரையை வருடி வருடி சுகப்பட்டு விட்டு, அலைகள் பின்னோக்கி மீண்டும் கடலுடன் கலந்து ஓய்ந்து போகின்றன; கை கோர்த்து நடந்து வந்த காதல் ஜோடி ஒன்று திடீரென நின்று முத்தமழை பொழிகிறது; இளைஞர்களும் யுவதிகளுமாக சேர்ந்து சாவகாசமாக கைப்பந்து ஆடுகிறார்கள்; இளைஞர்கள் குறுக்கு மறுக்காக ஓடி விளையாடுகிறார்கள். இரு வயோதிபர்கள் அவளைப் பார்த்து ஏதோ சொல்லிக் கொண்டு போகிறார்கள். சாயம் பூசிய தன் தலைமுடியைப் பற்றித்தான் பேசுவார்கள் என எண்ணி, அதைப் பற்றிய கவலையேதும் கொள்ளாமல், மனதிற்குள் சிரிக்கிறாள். அவர்கள் பதித்த பாதத் தடங்கள் அப்படியே கடற்கரை மண்ணில் பதிய, அந்த அழகை ரசித்தபடி, தன் கால்கள் தண்ணீரில் நனைய அவர்களுக்கு சமாந்தரமாக மெல்ல நடக்கிறாள்.

      அப்பா எறியும் பந்தை பிடித்தும், எறிந்தும் விளையாடுகின்ற சிறுவனை இடையறுத்து, கறுத்து மெலிந்த சிறுவன் ஒருவன் கையிலே ஒரு சொப்பிங் பாக் சகிதமாக ஓடுகிறான். அவன் ஓடுகிற விதமும், அவனுடைய முகத்தில் இருக்கும் கடுமையும் அவளுக்கு அவனை எல்லோரிடமும் இருந்து வேறுபடுத்துகிறது. அவளுடைய கண் அவனை பின் தொடர்கிறது. அந்தச் சிறுவன் ஒரு பெண்ணிடம் போய் ஏதோ ஒன்றை நீட்டுகிறான். அதை வாங்கி வைத்தபடி, அந்தப் பெண் ஒரு நோட்டை நீட்டுகிறாள். அவன் பணத்தை வாங்கி கழுசான் பொக்கற்றுக்குள் வைத்தபடி நடக்கிறான். அந்தப் பெண் ஏதோ சொல்லுகிறாள்; அவன் ஆமென தலையாட்டியபடி நடக்கிறான். அவள் தொலைவில் இருந்து பார்த்தபடி சிந்திக்கிறாள்.

மற்றவர்களுடைய வாழ்க்கை பற்றி அறிந்து கொள்வதும் அதை லயித்துக் கொள்வதிலும் சுகமடைகிற ரகம் அவள். அவர்களிற்காக ஏங்குவதும் துடிப்பதும் இரக்கம் காட்டுவதும் அவள் சுபாவம். ஏதோ ஒருவித மன உந்துதலோடு அந்தப் பெண்ணை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறாள்.  தொலைவில் நின்று பார்க்க அந்தப் பெண் நாற்பது வயதை எட்டி நிற்கும் பெண் போலவும், அந்தச் சிறுவன் அவளுடைய மகன் போலவும் அவளுக்கு தோன்றுகிறது. அந்த இருவருடைய வாழ்வியல் முறையை தெரிந்து கொள்ள அவள் மனம் விழைகிறது. அவள் மெல்ல அந்தப் பெண்மணி நோக்கி நடக்கிறாள். கால்விரல்களின் இடுக்குகளில் இருந்த கடல்மண் பாதணிக்குள் சிக்கி பாதங்களை சீண்டுகிறது. இனம் புரியாத சினம் ஏற்படுகின்றது.

      ஒரு சிறிய மரத்தை அண்டிய நிலத் தோரமாக, துணியைக் கீழே விரித்து, அதை ஒட்டி அந்தப்பெண்மணி உட்கார்ந்து இருக்கிறாள். வெயிலில் இருந்து விடுதலையாக கறுத்தக் குடையொன்றையும் பிடித்திருக்கிறாள். சிறு பொலித்தீன் பைகளில் அடைக்கப்பட்ட சில வகையான சிறு தீன்பண்ட பொட்டலங்களையும், தண்ணீர் போத்தல்களையும், அந்தத்  துணிமேலே அடுக்கி வைத்து வியாபாரம் செய்கிறாள் அந்தப்பெண். அவள் கிட்ட நெருங்கி, கடலைப் பொட்டலங்களை காட்டி, ”ஒரு பைக்கற்”  என்று சொல்கிறாள். அந்தப் பெண் அதை அவளிடம் கொடுத்து, காசைப் பெற்றுக் கொள்கிறாள்; மிகுதிப் பணத்தை அவள் வாங்கி, சரிசெய்யாமலே தனது கழுத்தில் தொங்கிய கறுத்த லெதர் பையின் சிப்பை பாதி திறந்தபடி திணிக்கிறாள்.  ”அக்கா சிகரெட் இருக்குதா?” பதின்நான்கு அல்லது பதினைந்து வயது மதிக்கத்தக்க இளைஞன் கேட்கிறான், ”நான் சிகரட் விற்கிறதில்லை தம்பி” என்று அந்தப்பெண்மணி சொல்ல, ”கடையை எக்ஸ்பாண்ட் பண்ணுங்க அக்கா” என்றபடி அவன் நடக்கிறான்.

          அந்தக் கடையின் ஓரமாக அமர்ந்தபடி, அவள் கடலையை வாயில் போட்டு மென்றபடி அந்தப் பெண்ணை பார்த்தபடி இருக்கிறாள். மெல்லச் சுருண்டு, நெற்றியோரமாக விழுந்து கிடக்கிறது கேசம். முகத்தில் பொட்டில்லை. கூந்தலை இழுத்து முடிந்திருக்கிறாள். வறுமை தெரியாது, முகத்தில் இலட்சுமி கடாட்சம் தெரிகிறது. கழுத்தில் ஒரு மெல்லிய கறுத்த நூலும், அந்த நூலில் முருகனின் பென்ரனும் தொங்குகிறது. அதை அவள் சாறிக்கு வெளியே விட்டு, சாறியை கொஞ்சம் தூக்கி இடுப்பிலே சொருகி இருக்கிறாள். கல்லு வைத்த தோடும், கொஞ்சம் விதிவிலக்காக, கறுத்த பார் மணிக்கூடும் கட்டியிருக்கிறாள். மேல்வாய் பல்லொன்று, வரிசையில் பின் தள்ளி இருந்து, தெத்தியாக அமைந்து முகத்திற்கு ஒரு வசீகரத்தைக் கொடுக்கிறது. நல்ல உயரமும் கட்டுமஸ்தான உடம்புமாக இருந்த அந்தப்பெண்மணி, ”என்னம்மா பார்க்கிற” என்று புன்முறுவலுடன் கேட்கிறாள். அவள் சுதாகரித்துக் கொண்டு ”ஹாய்” என்கிறாள். பதிலுக்கு சிரிக்கிறாள் அந்தபெண்மணி.

      ”என்ர பெயர் மதுரா” என்று அவள் சொல்ல, ”எந்த நாட்டில இருந்தம்மா வந்தனீங்க”? –பெண்மணி.

கனடா என்கிறாள் அவள்.

இப்ப நிறைய பேர் அங்கிருந்து வருகினம். எத்தனை வயசு அம்மா உனக்கு?

எனக்கு 19 வயசு. இந்த இடத்திற்கு பெயர் என்னக்கா ?

”காரைநகர், கார்நகர் பீச் எண்டு சொல்லுவினம்”

”ஓ அப்படியா, நைஸ் அக்கா”- மதுரா

ஓம், எங்கட ஊர்க்காரர் எம்பியா இருக்கேக்க, இந்த றோட்டயும் போட்டு, இந்த பீச்சயும் சரிப்படுத்தினவர். அவரைக்கூட யாரோ சுட்டுப் போட்டாங்கள் தங்கச்சி என்கிறாள் கவலையுடன்.
அதை அதிகம் காதில் போட்டுக் கொள்ளாதவளாய், நீங்க ரொம்ப அழகாக இருக்கிறீங்க அக்கா என்கிறாள் மதுரா.
அக்கா எண்டு சொல்லேக்க என்ர கடைசித் தங்கச்சி மாதிரியே இருக்குது.
”ஓ உங்களுக்கு தங்கச்சி இருக்கா”? என்று கண்ணைச் சிமிட்டுகிறாள் மதுரா.
நல்ல கெட்டிகாரி அம்மா அவள். எப்பவும் கலகலப்பா இருப்பாள்; புத்தகம் புத்தகமா வாசிப்பாள்; கவிதை கவிதையா எழுதுவாள். நமக்கெல்லாம் எதுக்கு காதல், கல்யாணம் எண்டு சொல்லுவாள். எல்லாருக்கும் அவளை நல்லாப் பிடிக்கும். எல்லா சந்தோசமும் அற்ப காலத்திற்கு தானே தங்கச்சி. என்று சொல்லி பெருமூச்சு விட்டாள்.

அவள் தொடர கொஞ்சம் வசதியாக பொறுமை காத்தாள் மதுரா.

பிறகம்மா, கொஞ்ச நாளா அமைதியா திரிஞ்சாள்; ஒருநாள் வீதியில சுட்டுக் கிடந்தாள். போராளிகளோட தொடர்பாம், புலனாய்வுப் பிரிவில பெரிய ஆளாம், அதுதான், ஆமி சுட்டது எண்டு ஊரில பேசினாங்கள். இது நடந்து நாலாம் நாள், அம்மாவும் திடீரென்று ஒருநாள் கண்ண மூடிற்றா. அந்தப் பெண் சொல்லி முடிக்க, மதுராவின் கண்ணீர்த் துளியொன்று மணலில் விழுகிறது.

மதுரா சம்பாஷனையைத் தொடர வழியின்றி ஸ்தம்பிக்கிறாள்.

”அதை விடு தங்கச்சி, இப்படி ஒவ்வொரு வீட்டிலயும் நிறைய நடந்திருக்கு” சொல்லியபடி அந்தக் குடையை மதுராவிடம் நீட்டுகிறாள்.

வெயில் ஓகேயா இருக்கு அக்கா என்று மதுரா சொல்ல, அவள் குடையை சுருக்கி பையினுள் வைக்கிறாள்.  அந்தச் சிறுவன் மீண்டும் ஒரு பையோடு ஓடி வருகிறான். அதை அந்தப் பெண்மணியிடம் கொடுக்கிறான். ”300 ரூபாய் குறைச்சு வாங்கின்னான் அம்மா” என்றபடி குதூகலமாக நடக்கிறான். மரத்தின் ஓரமாக கிடந்த பந்தை உதைத்து விட்டு, அதன் பின்னால் ஓடுகிறான் பிரியமாக.

      ”என்ர மகன், ரவுனில போய் மலிவா வாங்கி வருவான். அதை நான் இஞ்ச வைச்சு வித்து நாலு காசு சேர்த்துப் போடுவன், அந்த லாபத்தை வைச்சு நானும் என்ர மகனும், என்ர சின்ன மகளும் இரவு வயிற்ற நிரப்புவம், இரவில மட்டும்தான் ஒழுங்கான சாப்பாடு” சொல்லி முடிக்க, ஒருவர்  வந்து நாலு கச்சான் பைக்கற்றை கை வைத்து எடுத்து விட்டு ஒரு நோட்டை கொடுத்து விட்டு போகிறார். அவள் அதை வாங்கி கண்ணிலே ஒற்றி விட்டு, சுருட்டி சிறிய டின் ஒன்றில் தள்ளுகிறாள்.

யோசிக்காமல் ”லன்ஞ் சாப்பிடவில்லையா அக்கா” என்கிறாள் மதுரா.

என்ன அம்மா?

மதியம் சாப்பிடவில்லையா? என்கிறாள் மதுரா

இல்லையம்மா, நாங்க இரவு மட்டும் தான் சாப்பிடுவம். பகலில் உழைச்சு இரவில மட்டும்தான் ஒழுங்கான உணவு. மற்றும்படி அப்படியும் இப்படியும் தானம்மா என்று இழுத்தாள்.

”சாப்பாட்ட மிச்சம் வைக்காத, வீணாக் கொட்டாத, உலகத்தில எவ்வளவு சனம் பட்டினியால சாகுதுகள்” அம்மா அடிக்கடி சொல்வது இன்றுதான் மதுராவிற்கு உறைத்தது. கொஞ்சம் கவலையாகவும் இருந்தது. ஆனாலும் அந்தப் பெண் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் இயல்பாக சொன்னது அபூர்பமாக இருந்தது அவளுக்கு.

அவளுடைய கணவனைப் பற்றி அறிய மதுரா விரும்புகிறாள், ஆனாலும் கேட்க சங்கடமாக இருக்கிறது அவளுக்கு. ஒருவேளை, கணவன் குடிகாரனாக இருக்கலாம் என மனசுக்குள்ளே நினைத்தபடி, உங்கட மகள் எங்க? என்று கேட்கிறாள். ”அவ வீட்டில இருப்பா, அவளுக்கு 10 வயதம்மா, இஞ்சவர தனக்கு விருப்பம் இல்லையாம், பள்ளிகூடத்தில எல்லாரும் ஒருமாதிரி பார்ப்பீனமாம் என்று சொல்லுறாள்” என்கிறாள் அந்தப் பெண்மணி.

”உங்கட மகன் ஸ்கூல் போகிறது இல்லையா அக்கா”? என்கிறாள் மதுரா. இல்லையம்மா. அவன் தான் எனக்கு ஒத்தாசை என்கிறாள் சர்வசாதாரணமாக. மகனின் கல்வி பற்றி அவள் அலட்டிக் கொள்ளாதது மதுராவுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. சூரியன் மெல்ல மெல்ல அஸ்தமிக்க லேசான குளிர் உடலை வருடுகிறது. அந்தப் பெண்ணின் கணவனைப் பற்றி அறிந்து விடவேண்டும் என மீண்டும் ஆர்வமுறுகிறாள். ஆனாலும் கேட்டு, மீண்டும் ஏன் அவளைக் கவலைப் படுத்துவான் என எண்ணுகிறாள்.

அந்தப் பெண்மணியும் எதையோ யோசித்தவளாய், இவர் இருந்தா எங்களுக்கு ஏன் இந்த கேவலம் என்கிறாள்.

என்ன அக்கா என்கிறாள்?

இவர் இருந்தா எங்களுக்கு ஏன் இந்த கேவலம் என்கிறாள் மீண்டும்.

”ஓ உங்கட ஹஸ்பன்ரயா சொன்னீங்க”? என்கிறாள் மதுரா

ஆம் என தலையசைக்கிறாள் கவலை படர்ந்த முகத்துடன்.

என்ன நடந்தது அக்கா? என்கிறாள் பொறுக்க முடியாமல்.

       ஆறு வருஷத்துக்கு முன்னாடி, இராணுவம் முன்னேறி வந்தது எங்கட பகுதிக்குள்ள. நாங்க குடும்பமா எங்கட கடையை பூட்டிற்று வீட்டிற்குள்ள இருந்தம். அவர் நல்ல இளமையா, வாட்டசாட்டமா இருந்தார். அவங்களின்ர கண்ணுக்குள்ள குத்தியிருக்க வேணும். அடிச்சு இழுத்துக் கொண்டு போனாங்க. அவ்வளவுதான், பிறகு என்னாச்சு எண்டு எங்களுக்கு ஒண்ணுமே தெரியாது. இப்போதுதான் அந்தப் பெண் மனசளவில் நொந்து, கலங்கியதை அவள் கவனிக்கிறாள். மதுராவிற்கு ஓ என்று அழவேணும் போல இருக்கிறது. அந்தப் பெண்ணைக் கட்டியணைத்து ஆறுதல்பட வேணும் போலவும் இருக்கிறது. ஆனாலும் செய்யவோ, சொல்லவோ ஏதும் அறியாமல் திணறியபடி மறுபக்கம் திரும்ப, தூரமாக பெரியப்பா வருவது அவளுக்கு லேசாகப் புலப்படுகிறது. மதுராவைக் கண்டதும் பதட்டமாக நடந்து வந்த பெரியப்பாவின் முகம் ஆறுதல் படுவதை அவள் கவனிக்கிறாள். ”எங்க சொல்லாம வந்தனீ” என்று பெரியப்பா கடிந்தபடி அண்மிக்கிறார்.

      பெரியப்பா கூப்பிடு தூரமாக நெருங்கியதும், மதுரா எழுந்து கொள்ள, கடைக்காரப் பெண்மணியும் எழுந்து பெரியப்பாவை கைகூப்பி வணங்குகிறாள். ஏன் கைகூப்பி வணங்குகிறாள் என அறியாமல், ”எவெரிதிங் ஃப்ன் பெரியப்பா” என்கிறாள் மதுரா பதட்டத்துடன்.

”ஐயா, எப்படி இருக்கிறீங்க”? என்கிறாள் அந்தப் பெண் பௌவியமாக.

”நல்லா இருக்கிறன் அம்மா” என்கிறார் பெரியப்பா. ஒன்றும் புரியாமல் மதுரா அப்படியே நிற்கிறாள்.

”இது உங்கட பெண்ணா ஐயா, நான் நினைச்சனான், இந்த தங்கமான பொண்ணு உங்கள மாதிரி தங்கமான மனிசர் வீட்டுப் பொண்ணாத்தான் இருக்கும்” என்கிறாள் நம்பிக்கையான தொனியில்.

இது என்னுடைய தம்பியினுடைய மகள், கனடாவில இருக்கினம்,

சொன்னவா ஐயா என்கிறாள் பெருமையாக.

போயிற்று வாறம் என்றபடி பெரியப்பா கிளம்ப, மதுராவும் தலையசைத்து, ”போயிற்று வாறன் அக்கா” என்று சொல்லி கண் கலங்குகிறாள். மகளை நல்லா படிப்பியுங்க அக்கா என்று சொல்ல வாயெடுத்தாள், ஆனாலும் துக்கம் தாளாமல் வார்த்தைகளை அடக்கிக் கொண்டு விடைபெறுகிறாள். மதுராவிற்கு லேசாக மனம் வலிக்கிறது. பாட்டி இறந்தபோது கூட அழாதவள், அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கிறாள்.

ஐயா நீங்க செய்த உதவியை மறக்க மாட்டம் என்கிறாள் அந்தப் பெண்.

அதெல்லாம் ஒண்ணுமில்லை என்பது போல பெரியப்பா கண்ணால் ஜாடை செய்து, தலையசைத்து திரும்பி நடக்கிறார். சிறிது நேரம், பார்த்தபடி நின்று அந்தப் பெண்மணி,  பின்னால் வேகமாக வந்து, தன் கையில் இருந்த கைக் கடிகாரத்தை கழற்றி, மதுராவின் கையை இழுத்து, கட்டி விடுகிறாள். 

”என்னக்கா இதெல்லாம்” என்கிறாள் மதுரா ஆச்சரியமாக.

”இந்த மணிக்கூடு, சுவிஸிலிருந்து இந்த பீச்சுக்கு வந்த குடும்பம், எனக்கு பிரசென்ற் பண்ணினவ. கொஞ்சகாலம் இந்த அக்காவின்ர ஞாபகமா இதை நீ கட்டியிரம்மா” சொல்லிச் சந்தோசப்பட்டுக் கொண்டாள் அந்தப் பெண்.

என்னக்கா என்பதுபோல மதுரா பார்த்தாள்.

என்ன மணிக்கூட்டின்ர டிசையின் சரியில்லையா? மெல்லச் சிரிக்கிறாள்

”சீ சீ, நல்லாயிருக்கு அக்கா” என்கிறாள். அவளின் கன்னத்தில் குழி விழுகிறது.

நீ ரொம்ப அழகா இருக்கிற அம்மா என்கிறாள்.

மதுரா கண்கலங்கியபடி, திடீரென அவளைக் கட்டியணைக்கிறாள்.

பெரியப்பாவும் மதுராவும் நடக்கத் தொடங்குகிறார்கள்.

பெரியப்பாவும் மதுராவும் நடந்து போவதை அப்படியே பார்த்தபடி நிற்கிறாள்.

ஒருநாள் மகன் விளையாடும் போது, கால் காயப்படுகிறது. மகனுக்கு மருந்து கட்ட தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறாள். அப்போ பணம் இல்லாத காரணத்தால் மருந்து கட்ட அவர்கள் மறுத்து விடுகிறார்கள். அப்போது அந்த மருத்துவ மனையில், பெரிய டாக்டராக இந்தப் பெரியப்பாதான் இருந்தார். தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த அந்த டாக்டர் தனது வீட்டிற்கு இவர்களை வரும்படி அழைத்து, இலவசமாக மருந்து கட்டி, மாத்திரையும் கொடுத்து அனுப்பிவிட்டார்.

இப்போது அவரோடு அந்தப் பிள்ளையும் நடந்து போவதை பார்த்து, ஆனந்தமாக கண் கலங்குகிறாள்; கடைநோக்கி நடக்கிறாள். ”என்ர மகள் எப்படி வளர்ந்து வரவேணும் எண்டு நான் நினைச்சதே இல்லை, ஆனா இப்ப நினைக்கிறன், என்ர மகள் அந்தப் பிள்ளை மாதிரி எல்லாரையும் நேசிக்கக் கூடிய பண்பான பிள்ளையா வரவேணும்” என்று சொல்லி சொல்லி நடக்கிறாள். இன்றைய மாலைப் பொழுது, ஏதோ அவளுக்கு வாழ்வின் மீது மிகப்பெரிய காதலை ஊட்டுகிறது.

நம்மைச் சுற்றியிருப்பவர்கள், நம்மை விட்டு விலக விலக, வாழ்க்கை புதிய மனிதர்களை அறிமுகப் படுத்திக் கொண்டே இருக்கிறது. மனிதன் ஒவ்வொரு காலத்திலும், காலத்தோடு ஒட்டியும், காலத்திலிரிந்து பிரிந்தும் நடக்கிறான். நேசிக்கிற வாழ்க்கை கை நழுவிப் போகும் போதெல்லாம், புதிய வாழ்க்கை வந்து கைகூப்பி வரவேற்கிறது. விருப்பு வெறுப்புகளோடு, வாழ்வை இழுத்துக் கொண்டு போவதுதான் வாழ்வாகிப் போகிறது. அப்பப்போ தன் கனவுகளை புதைத்து வைத்து விட்டு, நிஜத்தோடு மனிதன் மாரடிக்கிறான். தேவைக்கும் அதை நிறைவேற்றுதலுக்கும் இடையில் மனிதன் போராடியபடியே வாழ்வை முடித்துக் கொள்கிறான். நிறைவேறியவை சொற்பமாகவும், நிறைவேறாதவை மிச்சமாகவும் வாழ்வை முடிக்கும் போது, அனுபவம் என்கின்ற போர்வையோடு மரணத்திற்குள் போகிறான்.

எதையோ சிந்தித்தபடி பெரியப்பாவோடு நடக்கிறாள் மதுரா. பெரியப்பா வாழுகிற வாழ்க்கை, அந்தப் பெண்மணி வாழுகிற வாழ்க்கை, கனடாவில் தன்னுடைய அப்பா, அம்மா மற்றும் தான் வாழுகிற வாழ்க்கை பற்றி எண்ணியபடியே நடக்கிறாள். பெரியப்பா காரில் ஏறி, இவள் ஏறும்வரை காத்திருக்கிறாள். அவள் அப்படியே கார் கதவைப் பிடித்தபடி நிற்கிறாள்.

”ஏறம்மா” என்கிறார் பெரியப்பா.

”ஓகே பெரியப்பா” என்றபடி காரில் ஏறுகிறாள். கார் யாழ்ப்பாணம் நோக்கி விரைகிறது.

”நேரமாகுது, இப்ப என்ன நேரம் அம்மா” பெரியப்பா.

கையை திருப்பி, கைக்கடிகாரத்தை தூக்கி, ”8 மணி, சிறிலங்கா நேரம்” என்கிறாள் மதுரா.

பெரியப்பா சிரிக்கிறார்.

 

Tuesday, July 23, 2013

1983-2009


1983 இல், தெற்கில் நடந்த இனக்கலவரத்தையும், 2009 இல், வடக்கில், முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலையையும் நினைக்கும் போதெல்லாம் தமிழர்களால் கொதிக்காமல் இருக்க முடிவதில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில், பட்ட அவமானங்களும், பறிகொடுத்த உயிர்களும் ஒவ்வொரு தமிழனுடைய நெஞ்சிலும் ஆழப் பதிந்து வடுவாகிக் கிடக்கின்றன. வெறும் 12 வீதமே தமிழர்கள் என்ற நிலைப்பாட்டில் சிங்கள அரசு தொடர்ந்தும் தமிழர்களின் நலனை உதாசீனம் செய்வது ஒட்டுமொத்த இலங்கைக்கும் நல்லதல்ல. நீறு பூத்த நெருப்பாக ஒவ்வொரு தமிழனுடைய நெஞ்சிலும் அமுங்கிக் கிடக்கும் காயங்களும், வலிகளும் என்றோ ஒருநாள் மீண்டும் தலைதூக்கும். அரசியல், பொருளாதார வெளியில் தமிழர் கை ஓங்கி, மீண்டும் தமிழர் கொடி பறக்கின்ற காலம் மலரும். இப்படியெல்லாம் நான் உங்களை உசுப்பேற்றி, இக்கட்டுரைக்கு வாசகராக்கிக் கொள்ள முனையவில்லை.

இருப்பினும், தமிழர்களாகிய நாம், நமது அரசியல், பொருளாதார, சமூக நலன்களில் அக்கறையில்லாமல் நம்மை நாமே உதாசீனம் செய்வது அறிவுடமை ஆகாது. கடந்த காலத்தின் கசப்பான வரலாற்றை புரிந்து, எதிர்காலத்தில் நமக்குரிய பாதையை உருவாக்க வேண்டிய தார்மீகக் கடமை நமக்கு உண்டல்லவா. ஐக்கிய இலங்கைக்குள், மூன்று இனத்தவர்களும் ஐக்கியமாக வாழுதல் என்பது இனி சாத்தியமில்லை. 1983-இனக்கலவரமும், 2009-இனப்படுகொலையும் இதற்கு நல்ல சான்று பகரும். அதே நேரத்தில், கடந்த 60 ஆண்டுகளிற்கு மேலாக தமிழீழம் அடைவதற்காக போடப்பட்ட அகிம்சாவழி அத்திவாரங்களும், பிரபாகரனிய கட்டுமானங்களும் சிங்கள அரசால் நிர்மூலமாக்கப்பட்ட இத்தருணத்தில் ஈழத்தமிழர்களால் என்ன செய்ய முடியும்? சுயநல, அதிகார, போட்டி மனோநிலையால் பிளவுபட்டுக் கிடக்கும் புலம்பெயர் தமிழர்கள் என் செய்வார்கள்!   

1983 இல், விடுதலைப் புலிகள், வெறும் போராளிக் குழுக்காளாக இருக்கும்போது திருநெல்வேலியில் 13 இராணுவ வீரர்களை கொலை செய்தமைக்காக, ஒட்டுமொத்த தமிழினத்தையே விரோதிகளாக பார்த்தது சிங்கள அரசு. டில்லியில் இருந்து, அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் வலுவான அழுத்தம் வரும்வரை ஜே. ஆரின் அரசாங்கம் இனக் கலவரத்தை நிறுத்த எந்தவிதமான முஸ்தீபும் எடுக்கவில்லை; பதிலாக தமிழருக்கு எதிரான இனக்கலவரத்தை அரசு சார்ந்த காவல்துறையே ஊக்கிவித்தது என்பதுதான் வரலாற்றுச் சோகம். சிங்கள பிரதேசங்களில், எட்ட முடியாத உயரத்தில் இருந்த தமிழர் வாழ்வியலை சிதைத்து, அவர்களை பரதேசிகளாக்கி, ஏழ்மைப்படுத்த சிங்கள அரசு செய்த கொடூரமான இனக்கலவரம் அது. தமிழர்கள் ஓடி ஒதுங்க இடமில்லாமல் பட்ட கஸ்ரங்கள், பறிகொடுத்த சொத்துக்கள், இழந்த உயிர்கள் கொஞ்சமல்ல. திறன் மிகுந்த வரலாற்று ஆசிரியர்கள் எம்மிடம் இல்லாத காரணத்தால் இவை அக்குவேறு ஆணிவேறாக வரலாற்றில் பதிவு செய்யப்படவும் இல்லை.

இதைப்போலவே, 2009ல், முள்ளிவாய்க்கால் எனும் மிகக் குறுகிய பிரதேசத்தில் அடைபட்டுக் கிடந்த விடுதலைப் புலிகளை மெல்ல மெல்ல அழிப்பதற்கும் அவர்கள் சரணடைவதற்கும் வாய்ப்புக்கள் இருந்த போதும், அவசர அவசரமாக, விசனத்தனமாக பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்களை அனாவசியமாக கொன்று குவித்தார்கள். மக்களை புலிகள் மனித கேடயங்களாக பயன்படுத்துகின்றார்கள் என அனாவசிய குற்றச்சாட்டை பிரசார யுக்தியாக பயன்படுத்தி, நாற்பது ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட, அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்தார்கள். ஈவிரக்கமில்லாமல் கற்பழித்தார்கள். அனைத்து விதமான போரியல் குற்றங்களையும் புரிந்தார்கள். தமிழர்கள் வேறு, சிங்களவர்கள் வேறு என்பதை அப்படியே நிரூபித்தார்கள். புலிகள் வீழ்ந்து, யுத்தம் முடிவடைந்த இன்றைய நிலையிலும் தமிழர்களை நாம் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்கின்ற அதிகார மனோநிலையில்தான் அரசு இயங்கி வருகின்றது.

1983 ற்கு முன்னால் பார்த்தாலும், சிங்களவர்கள் நியாயபூர்வமாக நடந்ததில்லை. தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய நூல்நிலையமாக திகழ்ந்த யாழ் நூலகத்தைக் கூட, லண்டன், கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற காமினி திசநாயக்காவின் தலைமையில் எரித்து நாசம் செய்தார்கள், அதற்கு வலுவான காரணம் எதுவும் இல்லை. இப்படித்தான் தனது சொந்த நலனுக்காக, 1956, எஸ். ட்பில்யு. ஆர். பண்டாரநாயக்கா அவர்கள் சிங்கள மொழிச்சட்டத்தை பாராளுமன்றத்தில் அமுல் செய்தார். பண்டா-செல்வா, டட்லி-செல்வா ஒப்பந்தங்களையும் வலுவான காரணங்கள் எதுவுமின்றி தீடிரென்று கிழித்தெறிந்தார்கள். மலையகத் தமிழ்மக்களின் வாக்குரிமை பறிப்பு, தமிழர்களின் சத்தியாக்கிரகத்தை வன்முறையால் அடக்கியமை, பல சிறிய இனக் கலவரங்கள், இப்படியாக 1982 நூலகம் எரிப்பு வரை காரணமில்லாமல் சிங்கள ஆட்சியாளார்கள் தமிழர்களிற்கு எதிராக செய்த வன்முறைகள் அதிகம்.  

வாள் தூக்கி போர் செய்த வீரத் தமிழன் வாய் கட்டி பொறுமை காத்த காலங்கள் ஏராளம். காந்திய வழியில் சென்ற தமிழன் தீயால் சுடப்பட்ட சம்பவங்கள் ஏராளம். இதன் விளைவாகவே, புத்தகங்கள் சுமந்த தமிழ் இளைஞர்கள் குண்டுகளை எடுக்கத் தள்ளப்பட்டார்கள். காந்தியையும், மாட்டீன் லூதர் கிங்கையும் படித்தவர்கள், சேகுவராவையும் மாவோயையும் படித்தார்கள். ஏராளமான புத்திஜீவிகளையும் பட்டதாரிகளையும் பிரசவித்த தமிழ் பாடசாலைகளில் போராளிகள் உருவாகத் தொடங்கினார்கள். இனியும் ஈனத்தமிழனாக இருக்கமாட்டோம், மானத்தமிழனாக மடிவோம் என எழுந்தார்கள். எழுந்தார்கள்! வெடித்தார்கள்! பல களங்களை வென்று மறத்தமிழன் நாம் என நெஞ்சை நிமிர்த்தினார்கள். காலச் சூறாவளியால் அவர்களும் துடைக்கப்பட்டார்கள். கோலோச்ச வேண்டிய அவர்கள் கொடுங்கோலால் கொன்றழிக்கப்பட்டார்கள்.

நிற்க! பலவீனப்பட்டு, பிளவுபட்டுக் கிடக்கும் இன்றைய ஈழத்து தமிழ் அரசியல் கட்சிகளும், வளர்வதற்கு முன்பாகவே தமக்குள், உள்ளீடாக மோதிக்கொள்ளும் புலம்பெயர் கட்சிகளும்தான் இன்றைய தமிழர் நலனின் தீர்மானிகள். மிகக் குழப்பமான இந்த காலப் பகுதியில் புலம்பெயர் தமிழருடைய பங்களிப்பு  எதுவாக இருக்க முடியும்?

மொழி, கலை, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களின் பேரால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாமல், வெறும் உணர்ச்சிவசப் படுகின்ற மனோநிலையை தவிர்த்து, அறிவு ரீதியாக நாம் ஒன்றிணைய வேண்டும். சுயநல வாழ்வில் தாமுண்டு தம்குடும்பமுண்டு என்கின்ற மனோநிலையில் வாழுகின்றவர்களும், எரிகின்ற வீட்டில் எடுப்பதை எடுத்து விடலாம் என துடிக்கின்ற சுயநலன் விரும்பிகளும், தங்களுடைய திறமைகளை மேடையேற்றி தங்கள் ஆணவத்திற்கு தீனிபோட்டு அற்பசுகம் காணுகின்றவர்களும், ஜனரஞ்சக ஆதரவிற்காக கொள்கை வேசமிடுபவர்களும் ஒவ்வொரு சமூகத்தளத்திலும் இருப்பார்கள். இவர்களுடைய கரங்கள் வலுக்கின்றபோதுதான் சமூக நாசம் ஆரம்பிக்கின்றது. இவர்கள் தங்கள் செயல்களை தாங்களே அசைபோட்டுப் பார்க்கின்ற ரகமானவர்கள் அல்லர்.

ஆனாலும் நாம் கொஞ்சம் விழிப்பாக இருந்தால், நம் மொழிமீதும், நம் தாய்மண்ணின்மீதும் தீராக்காதல் கொண்டால் ஒருநாள் நாம் வெல்வோம். உலக சரித்திரத்தில் ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்ட இனம் மீண்டும் எழுந்து உரிமையை பெற்றுக்கொண்ட வரலாறுகள் அதிகமுண்டு. அதுவும் தமிழர்கள் புத்திசாலிகள், வரலாற்றுப் பின்னணி கொண்டவர்கள். காலம் காலமாக அந்நிய ஆட்சியிலிருந்து மீண்டு வந்தவர்கள். தமிழர் நாம் எழுவோம்! என்றோ நாம் வெல்வோம் என்பதை உங்கள் தாரக மந்திரமாக்கிக் கொள்ளுங்கள். தோற்பது மீண்டும் பலமாக வெல்வதற்கு என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

உயர் சிந்தனைகள், நல்ல எண்ணங்கள், ஒன்றுபடுதல், ஒற்றுமையாக ஒழுகுதல் இவைதான் இன்றைய தேவைகள். 1983 லும், 2009 லும் உங்கள் இனம் அனுபவித்த கொடுமைகளை மறந்து விடாதீர்கள். அதேநேரத்தில் பழிவாங்கும் மனோநிலையையும் வளர்த்து விடாதீர்கள். காலம் வரும், அப்போது தூற்றிக்கொள்ளுங்கள். நாம் விதைத்த நல்ல விதைகளை நாம் அறுவடை செய்யும் காலம் நிச்சயம் மலரும். நம்பிக்கையுடன் வேலை செய்யுங்கள். சுதந்திரக் காற்றை நம்மினம் சுவாசிக்கும் நல்லகாலம் வரும்.

Friday, July 19, 2013

வாலி எனும் கவிவள்ளல்


வலிக்கு இன்று மருந்தாக-எங்கள்

வாலிக்கு வடிப்போமா ஒருகவிதை

வயல்எலி சேர்த்த நெற்கதிராக-எந்தன்

வாய்சொல் சேருமோ நற்கவியாக

 

திருச்சியில் உருவான தீக்குச்சி-அது

திருவிளக்கானது தமிழின் உச்சிக்கு

திருவரங்கம் பெற்றெடுத்த பகிரங்கம்-அதன்

திருக்கரங்கள் எப்போதும் கவிசுரக்கும்

 

பாட்டெழுதி வென்றாயே பத்மஸ்ரீ-உன்

பாட்டாலே பெற்றாயே பலவிசிறி

பாண்டவர் பூமி எழுதிய நீஞானி-இங்கு

மாண்டவர் போதும் எழுந்து வாநீ

 

முக்காலம் உணர்ந்த முனிவனும்-நீ

முக்காலா முக்காபில்லாவார்த்தை

சிக்காமல் போட்டா வித்தகனும்நீ-இங்கு

மாண்டவர் போதும் எழுந்து வாநீ

 

ஐம்பது ஆண்டுகளாய் எழுதியும்

குறைவேதும் இல்லை உன்பணியில்

ஐந்து தலைமுறைக்காய் எழுதியும்

குறையேதும் இல்லை உன்பணிவில்

 

கவிபாடும் உன்னழகில் எழில் கொஞ்சும்

உன்கதையே கவியாகும் அதைஎது மிஞ்சும்

உணர்வாலே குளிப்பாட்டி வார்த்தை கொட்டும்

உண்மைக்கவிஞன் என உனைஉலகம் போற்றும்

 

எங்களிற்காய் கவிபடித்த உன்வதனம்

எம்வாழ்வில் எப்போதும்அது உன்னதம்

எதுகையும் மோனையும் உன்வசம்

இனிஎப்போ காண்போமே உன்னிடம்

 

இந்த மகா கவிஞனின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

Saturday, May 18, 2013

அண்ணனுக்கு ஆயிரம் தம்பிகள் (முள்ளிவாய்க்கால் 4ம் ஆண்டு)


அவலங்களின் தாய் நிலமாகி, வரலாற்றுச் சுவடுகளை மட்டுமே தாங்கி, சீரழிந்து போய் கிடக்கும் முள்ளிவாய்க்கால் பற்றி கவிதை ஒன்று வடிக்கவே முனைந்தேன்; கண்ணீர்த் துளிகளோடு தோற்றுப் போனேன். வெறும் பொருளாதார வளர்வை மட்டும் நமதாக்கி, வெறும் சுகபோகங்களை மட்டுமே அறுவடை செய்யும் புலம் பெயர்ந்த தமிழனால் எப்படி புலம்பாமல் இருக்க முடியும்? ஆயிரம் ஆயிரம் அகதிகளின் குமுறல்கள் உலகத்தின் மனச்சாட்சிக்கு புரியாமல் போகலாம். சீரியஷாக சிந்தித்தால் அடிவயிறு பற்றி எரியும் இந்த புலம்பெயர்ந்த அபலைகளின் அழுகுரல் உலக மனித நேயத்தை உலுக்காமல் விடலாம். தாய்மொழியை இழந்து, சொந்த தேசத்தின் வாஞ்சையையும், வாசனையையும் தொலைத்து, பண்பாட்டையும் பறிகொடுத்து, அடிமைப்பட்ட தன்மக்களிற்காக குரல் கொடுக்க வக்கில்லாமல், இறுதிவரை அநீதியை எதிர்க்க திராணி இல்லாமல், இயந்திரச் சுடுகாட்டிற்கு போகப்போகும் நம் அவலத்தை நினைத்தால் வாழ்க்கை வெறுக்காமல் என்ன செய்யும்?

பன்னெடுங்காலமாக வீரத்தை பறைசாற்றிய தமிழன் மண்டியிட்ட இடமா முள்ளிவாய்க்கால்? களத்தில் புதிய வியூகம் ஒன்றை உருவாக்க முனைந்து வியூகமே வினையாகிப்போன இடமா முள்ளிவாய்க்கால்? அல்லது, கருணையில்லா உலக வல்லரசுகளின் கொடிய கரங்களிற்குள் சிக்குண்டு தமிழர் வீரம் தோற்கடிக்கப்பட்ட இடமா முள்ளிவாய்க்கால்? தாழ்வுவரினும், வீழ்ச்சி கொள்ளினும் தமிழீழம் மட்டுமே தமிழர்களிற்குச் சரியான இலக்கு என்பதை  கணித்து, வீரத்தோடும் விவேகத்தோடும் ஒரு இனம் தன்னை தானே அழித்துக்கொண்டு, அந்த அழிவினூடாக புதிய விடுதலை விதை ஒன்றை புதைத்த இடமா முள்ளிவாய்க்கால்? என்னைப் போன்ற சாதாரண மனிதனால் கணிக்க முடியாத கணக்கு முள்ளிவாய்க்கால் எனும் பெருங் கணக்கு. இந்த கணக்கைப் பற்றி வசைபாடுகின்றவர்களும், பெரிதாக்கி இசை பாடுகின்றவர்களும் கொஞ்சம் நிதானிக்க வேண்டும். ஏனெனில் இது பலரின் இரத்தத்தால் நிரப்பப்பட்ட கணக்கு. எதிர்கால முடிவுகளால் மட்டுமே தீர்மானிக்கப் படப்போகும் நெடுங்கணக்கு.

முள்ளிவாய்க்கால் பற்றி எழுத முற்படுகையிலே பிரபாகரனை எண்ணத் தோன்றுகிறது. சிலவேளைகளில் பிரபாகரனைப் பற்றி சிந்தித்தால் பலருக்கு கண்ணீர் முட்டும், ஒரு சொந்த சகோதரனை தொலைத்த வாஞ்சை மனதை வாட்டும். எங்கள் தேசத்திற்காக இருந்த கடைசிக் கட்டுமானம் அவனல்லவா என சொல்லி அழத் தோன்றும். அவமானப்பட்டு, நிர்வாணப்படுத்தப்பட்ட நம் தேசத்திற்கு புலிக்கொடியை உடையாக்கி அழகு பார்த்த செம்மல் அவனல்லவா என மனசு விசும்பும். வன்முறை, பாஸிசம், பயங்கரவாதம் என்று சிலர் கொச்சைப்படுத்தினாலும், எம் தேசிய ஆன்மாவிற்கு பலம் சேர்த்தவன் அவனல்லவா? சாதியாலும், வர்க்க வேறுபாட்டாலும், வறட்டுக் கௌரவங்களாலும் சிதறி கிடந்த எம் மக்களின் மனதில் புரட்சியை உருவாக்கி, தமிழ் சமூகத்திற்கு சமத்துவமும் முதாலாளித்துவமும் கலந்த நேர்பாதை ஒன்றை அமைத்தவன் அவனல்லவா? முற்றுமுழுதான சுதந்திரத்தை நாம் அனுபவிக்க, தமிழீழம் மட்டுமே சாத்தியம் என்ற மையக் கருத்தை ஆழமாக வேரூன்றியவன் அவனல்லவா? நாம் நெஞ்சை நிமிர்த்தி தமிழன் என்று சொல்லக் கூடிய இனமானத்தை தந்தவன் அவனல்லவா?  சரி கொஞ்சம் பொறுமையாக பின்னோக்கிப் பார்ப்போம்.

யாரும் எதிர்பாராத தருணத்தில், ஆனால் தேவையான நேரத்தில்தான் பிரபாகரன் போன்ற தலைவர்கள் கைத்துப்பாக்கியோடு களத்தில் காலடி எடுத்து வைத்தார்கள். அகிம்சையின் வழி நின்று, சாத்வீகமான வழியில் சிறுபாண்மையினத் தமிழர்களிற்கு விமோசனம் இல்லையென்ற உண்மையை உள்வாங்கிக் கொண்டுதான் எழுபதுகளின் ஆரம்பத்தில் பிரபாகரன் போன்ற தலைவர்களை வரலாறு சமைத்திருக்க வேண்டும். ஜி.ஜி பொன்னம்பலம் மற்றும் தந்தை செல்வாவும், நவரெத்தினமும், அவர்கள் வழிவந்த தோழர்களும் (அமிர்தலிங்கம் உட்பட) குறைந்தவர்கள் அல்ல. உலக ஒழுங்கில் ஓடி, காந்தீய முறையில் அணுகி, கிடைப்பதை பெற்றுக்கொண்டு, படிப்படியாக தனியரசு நோக்கிய கனவை அடைவதே அவர்களின் பாதையாக இருந்தது. தமிழர் போரட்டத்தின் பரிணாம வளர்ச்சிப் பணியில் அவர்கள் நடந்த போதுதான், சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பல்வேறு வகையான இன வர்க்க ஒடுக்குமுறைகளை சந்திக்க நேர்ந்தது. அரசாங்க தரப்பில் தலை விரித்தாடிய  எல்லாவிதமான அத்துமீறல்களுக்கும் அவர்கள் தலையாட்ட மறுத்தபோது, ஆயுத ரீதியாக ஒடுக்கப்பட்டார்கள்; அவமானப் படுத்தப்பட்டார்கள்; காரணமின்றி சிறையிலிடப்பட்டார்கள்; அரசியல் சூழ்ச்சிகளால் களுத்தறுக்கப்பட்டார்கள். இந்த போக்கின் முடிவை ஊகித்தறிந்த இளைஞர் குழாம் ஆயுதவழி செல்ல தீர்மானித்தார்கள். அவர்கள் எடுத்த முடிவு சரி என்பதை மாறி மாறி வந்த  சிங்கள அரசுகள் பின்னாளில் நிரூபித்தன. அதையே இப்போதைய அரசும் அப்பட்டமாக நிரூபித்துக் காட்டியுள்ளது.

புலிப்பாஸிசம் என்கின்ற கொச்சை விமர்சனம், பாதிக்கப்பட்ட சொந்த மக்களின் சாபங்கள், பலமான அரசியல் எதிர்வினைகள், இடையிடையே நடந்த உள்வீட்டுக் குளறுபடிகள், இந்திய வல்லரசின் நெருக்கடிகள், பொருளாதாரச் சிக்கல்கள் இவற்றோடுதான் பிரபாகரன் என்கின்ற ஆளுமை கட்டியெழுப்பப்பட்டது. தவிர்த்திருக்க வேண்டிய, ஆனால் தவிர்க்க முடியாமல் போன சகோதர யுத்தம், ஜே,ஆரின் சாணக்கியமான அரசியல், இந்திரா காந்தியின் திடீர் மரணம்; அகிம்சைவாதிகளின் பிரசாரம், ஆயுதப்போராட்டம் மீது கற்றவர்களும் பெரியவர்களும் வைத்திருந்த அவநம்பிக்கை, கற்றவர்களை மட்டுமே தூக்கிப் பிடிக்கும் யாழ்ப்பாண மேல்தட்டு மக்களின் மனோவியாதி, இப்படியாக பல தடைகளை பிரபாகரன் மிக நுட்பமாக தாண்டித்தான் வெளியே வந்தார்.

போராளிகளை தன்னுடைய குழந்தைகளைப் போல அரவணைத்துக் கொண்டது முதல் ஏழைகளையும், தாழ்த்தப்பட்டவர்களையும், பணக்காரர்களையும், அதிகாரத்தில் இருப்பவர்களையும் சமதளத்தில் வைத்துக் கொண்ட சமத்துவம்வரை பிரபாகரனை போற்றிப் புகழ ஆயிரம் காரணங்கள் உண்டு. அவருடைய குழந்தை மனம்; அந்த மனதை அப்படியே பிரதிபலிக்கின்ற அழகிய தோற்றம்; பழகும்போது மிக எளிமை; மனதால் அகங்காரம் கொள்ளாத பக்குவம்; இளமைப் பருவத்திலிருந்தே முற்றாக தன்னை பொது வாழ்க்கைக்கு அர்பணித்துக் கொண்ட இயல்பு; மிகவும் கறாரான ஒழுக்கம்; குறைவான பேச்சு, நிறைவான செயல். இதுதான் பிரபாகரன் என்கின்ற இளைஞன், தேசியத் தலைவனாகியதன் சூட்சுமம். கணவனின் பொதுவாழ்க்கையை புரிந்து கொண்ட வாழ்க்கைத்துணை, வரம் போல வாய்த்த பிரிகேடியர் பால்ராஜ் போன்ற தளபதிகள்; செய் என்று சைகை செய்தால் போதும், செத்து மடியும் போராளிகள், இம்மியும் பிசகாமல் இலக்கை சுக்கு நூறாக்கும் கரும்புலிகள், வறுமையிலும், அபாயத்திலும் எப்போதும் புலிகளைத் தங்கள் பிள்ளைகளாக பார்க்க பழகிக் கொண்ட சுதந்திர தாகம் மீதூரப் பெற்ற பொது ஜனங்கள், வள்ளல் எம்.ஜி.ஆர், அண்ணன் வைகோ மற்றும் நெடுமாறன் ஐயா போன்ற நல்ல இதயங்களின் ஆசிகள். இவைதான் பிரபாகரன் என்கின்ற தேசிய விருட்ஷத்தின் கிளைகள்.

தனக்குத் தெரிந்தவற்றை அப்படியே அழகாக செய்து முடிப்பதில் பிரபாகரன் ஒரு சிற்பி; சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் சாதுரியமாக காய்களை நகர்த்துவதிலும் பெரும் கில்லாடிதான். யார் எதிர்க்கினும் தனக்கு சரி என்பதை தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்துவதில் அவர் ஒர் நல்ல தலைவன். அலெக்சாண்டர், நெப்போலியன், கரிபால்டி, சேகுவரா, உமர் முக்தார் போன்ற உலகத் தலைவர்கள் வரிசையில் வைத்துக் கொண்டாடக் கூடிய வீரமகா புருஷன். மக்கள் மற்றும் போராளிகள் நலன், தேசத்தின் எதிர்காலம், தமிழீழம் என்கின்ற கட்டமைப்பு, எதற்கும் சோரம் போகாத இலட்சியம் இதுதான் பிரபாகரன் தன்னை நிலைநிறுத்திய தளம்.  

எதிர்க்கின்றவன் யமனாக இருந்தாலும் ஓங்கி அடிக்கின்ற மகா துணிச்சல். வாழையை வெட்டவும் கூரிய வாளோடு போகின்ற முன்னெச்சரிக்கை. எதிரிகளின் கோட்டைகளிற்கு மட்டுமல்ல, சகாக்களின் தலையணைக்குள்ளும் ஊடுருவித் துலாவுகின்ற புலனாய்வு எனும் மகா தந்திரம். மக்களும் புலிகளும் ஒன்றுதான் என்கின்ற விம்பத்தை உருவாக்கிய சாணக்கியம். கண்மூடித்தனமான பயிற்சியும், பயிற்சிக்கேற்ற முயற்சியும். இப்படித்தான் பிரபாகரன் தன்னை வளர்த்து எடுத்துக் கொண்டார்.

இலட்சியத்தின் மீது என்றும் மாறாத இயல்பான காதலும், உலக நாடுகளே வியக்கின்ற வகையில் வெற்றி கண்ட யுத்த களங்களும் பிரபாகரனுக்கு சர்வதேச அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தன. பிரபாகரனின் இலட்சியக் கனவை சரியாக புரிந்து கொண்ட உலகத் தமிழர்கள் அவரை தமிழினத்தின் ஒரேயொரு தனிப்பெரும் தலைவனாக போற்றிக் கொண்டாடினார்கள். இப்படியொரு தலைவன் எமக்கு எப்போதும் வாய்த்தது இல்லை, இனியும் வாய்க்க வாய்ப்பில்லை என நம்பினார்கள். பிரபாகரனுக்கு தெய்வ அந்தஸ்து கொடுக்கும் மனோநிலையில் பலர் உருவாகினார்கள்.

1983 ஆம் ஆண்டு ஆடியில் கண்ணிவெடித் தாக்குதல், 1985 ல் ”ஓபரேஷன் லிபரேஷன்”, 1987 ல் இந்திய இராணுவத்திற்கெதிரான யுத்தம், 1990 ல் மாங்குளம், கொக்குளாய் முகாம்கள் அழிப்பு, 1992 ல் கடற்படை விரிவாக்கம், 1994 ல் அவ்ரோ வகை விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டவை, 1996 ல் பாரிய முல்லை முகாம் தகர்ப்பு மற்றும் கொழும்பில் பாரிய குண்டுத்தாக்குதல்கள், 1997 ல் ஜெயசுக்குறுவிற்கு எதிரான மாபெரும் மரபுவழியிலான நெடுஞ்சமர், 2000 ல் ஆனையிறவு முகாம் நிர்மூலம் என்று பிரபாகரன் அடித்த ஒவ்வொரு அடியும் எதிரி நிலைகுலைந்து, அரசாங்கம் சித்தம் கலங்கிய சமர்கள். சேர, சோழ படைக்கு நிகரான படை பிரபாகரனது புலிப்படை என யாரும் யோசிக்காமல் சொல்லுமளவிற்கு பிரபாகரன் களத்தில் சாதித்துக் காட்டியவன். இதில் இரண்டுபட்ட கருத்துக்கு இடமில்லை. விடுதலைப் போரின் பரிணாம வளர்ச்சியின் தேவையாக, 2000 ஆம் ஆண்டுக்கு பின்பாக பிரபாகரன் சர்வதேச தளத்திலும் கவனம் செலுத்தி, சரியாக பயணிக்க வேண்டிய நிலைக்கு உந்தப்பட்டார்.

2001 புரட்டாதியில், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது பின்லாடனின் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்பாக, உலக நாடுகள் உஷாராகிக் கொண்டன. யாராக இருந்தாலும் சரி, அது விடுதலைப்போராக இருந்தாலும் சரி, பயங்கரவாத முத்திரை குத்தி பூண்டோடு அழிக்க வேண்டும் என திடசங்கற்பம் எடுத்துக் கொண்டார்கள். இதற்கு சமாந்தர காலகட்டத்தில்தான் பிரபாகரனும் வெளிநாட்டு புலிகள் அமைப்பில் சில மாற்றங்களை செய்ய முற்ப்பட்டிருந்தார். கே.பி, காஸ்ரோ, நெடியவன் என்றெல்லாம் சில மாற்றங்கள் நடந்ததாக ஊகங்களாக சொல்லப்பட்டது.

2004 ஆரம்பத்தில், கருணா அம்மான், ரணில் விக்கிரமசிங்காவின் சூழ்ச்சியில் அகப்பட்டு புலிகளிடமிருந்து பிரிந்து அரசோடு ஒட்டிக்கொண்டார். சர்வதேச சிக்கலுக்கு முகம் கொடுக்க இலகுவாக இருக்கும் எனக்கருதி புலிகளே ரணிலை ஒதுக்கி வைத்துவிட்டு, 2004 சித்திரையில் மகிந்த ராஜபக்‌ஷவை அதிபராக்கினார்கள். அதே நேரத்தில், இந்தியாவில், 2004ம் ஆண்டு வைகாசியில், திருமதி சோனியா ராஜீவ்காந்தியின் ஆட்சி சபையேறியது. இதற்கு முன்பாகவே 2002 இறுதியில் அமெரிக்க-இங்கிலாந்தின் ஆசியோடு, நோர்வே புன்சிரிப்போடு சமாதானத் தூதுவராக கைகுலுக்கி இருந்தது. வெள்ளைப் புறாவை கையிலே வைத்துக்கொண்டு, கறுத்த மனசோடு அங்கே வந்தார்கள். இந்த காலகட்டங்களில்தான், பல உலகநாடுகள் ஏற்கனவே புலிகளை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்து, தங்கள் நாடுகளில் இயங்க தடை செய்து இருந்தார்கள். 2006 மார்கழியில், வெளிநாட்டு தலைவர்களோடு குறைந்த பட்ச தொடர்புகளை பேணி வந்த அன்ரன் பாலசிங்கமும் மரணமானார். இந்தியாவின் அனுசரணையுடன் கடல்வழிப்பாதை முடக்கப்பட்டு ஆயுத வினியோகமும் தடைப்பட்டிருந்தது. கபடம், நயவஞ்சகம், சூழ்ச்சி அத்தனைக்கும் பெயர்போன உலக வல்லரசுகளின் கூட்டு முயற்சிக்கு எதிராக பிரபாகரனுக்கு காய்நகர்த்துவது கடினமாக இருந்தது.

பலநாடுகளின் இராணுவ உதவிகளோடு, நவீன ரக ஆயுதங்களோடு களத்தில் மூர்க்கத்தனமாக வந்த பல்லாயிரக் கணக்கான இராணுவப்படைக்கு எதிராக பிரபாகரனால் ஈடு கொடுக்க முடியவில்லை. முடிந்தவரை தாக்குப்பிடித்தார். இறுதியில்பிரிகேடியர் தீபன் உட்பட பல பெரும் தளபதிகள் சகிதமாக பிரபாகரன் நேரடியாக களத்தில் மாபெரும் முறியடிப்புத் தாக்குதலை நடாத்தினார். அந்த தாக்குதலையும், இந்திய அரசின் நவீனமயமான கருவிகள் ஊடாக எல்லாவற்றையும் முன்கூட்டியே அறிந்து அரசாங்கம் இலகுவாக முறியடித்தது. இறுதியாக புலிகளின் விமானத் தாக்குதலும் கைகொடுக்காமல் போக புலிகளிற்கு மாற்று வழி இல்லாமல் போனது.

ஏதாவது ஒருவகையில் மகிந்த அரசாங்கத்தை சர்வதேச சிக்கலுக்குள் மாட்டி, தான் மீண்டும் தலைதூக்க சரியான இடமாக முள்ளிவாய்க்கால் களத்தை பிரபாகரன் தேர்ந்தெடுத்திருக்கலாம். இது இனப்பிரச்சனை, இங்கே நடப்பது இனப்படுகொலை என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்டி தான் மீண்டும் சர்வதேச அனுதாபத்தையும் நியாயத்தையும் பெறலாம் என அவர் கருதி இருக்கலாம். ஏதோ ஒரு கணக்கு அதன் பின்னால் இருந்தது மட்டும் உண்மை. சில ஆண்டுகளிற்கு முன்பாகவே உலகநாடுகளின் உதவியுடன் 2009 ஆம் ஆண்டிற்குள் தாங்கள் அழிக்கப்பட்டு விடலாம் என யோகரெத்தினம் யோகி ஒரு மேடையில் பகிரமங்காக பேசியிருந்தார். எனவே புலிகள் முன்கூட்டியே இதை அனுமானித்ததோடு, புலிகளும் ஒரு கணக்கோடுதான் நிச்சயமாக இருந்திருப்பார்கள்.

கிருஷ்ணனின் வஞ்சகத்தால் சூழ்ச்சி செய்யப்பட்டு, களத்தில் தனித்து நின்ற கர்ணனைப் போலவே உலகச் சூழ்ச்சியில் அகப்பட்டு, பிரபாகரன் என்கின்ற மாவீரனும் களத்தில் நின்றான். முன்னவன் செஞ்சோற்றுக் கடனுக்காக நின்றான்; பின்னவன் மாவீரர்களிற்கும் கரும்புலிகளிற்கும், மக்களிற்கும் கொடுத்த வாக்கை காப்பாற்ற களத்தில் நின்றான். எல்லா நம்பிக்கைகளையும் இழந்து, தன்னம்பிக்கையோடு மட்டும் நிர்க்கதியாக நின்ற அந்த மகாத்மாவை நினைக்கையில் நெஞ்சம் கனக்கிறது.

முப்பது ஆண்டு கால பிரபாகரனது பொதுவாழ்க்கை மட்டுமல்ல, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளும், வசைகளும், அவருடைய முடிவுகள் பற்றிய அதிருப்தியும் வரலாற்றின் வழியில் ஆராயப்படும். நல்லவை கோலோச்சும்; தவறானவை சுட்டிக்காட்டப்படும். ஆனால் மூன்று தலைமுறையும் இறுதிவரை அடிபணியாது களத்தில் நின்ற அந்த வீரவரலாறு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும். மக்கள் தலைவர்கள் ஒருபோதும் இறப்பதில்லை. இலட்சிய அண்ணனுக்கு இலட்சக் கணக்கான தம்பிமார்கள் இருப்பார்கள். ஒரு ஒழுங்கான அண்ணன் இல்லாமல், நல்ல தலைவன் இல்லாமல் என் இனம் குட்டிச் சுவராகிய வண்ணமே இருப்பதுதான் மகா துரதிஸ்டம்.

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!

உங்கள் நேரத்திற்கு நன்றி,

அன்புடன்,

அ.பகீரதன்

Friday, March 8, 2013

பெண் எனும் பெருஞ்செல்வம்


சத்திரத்தில் சாமியார்

சமையலறையில் மாமியார்

உலகில் உன்னைவிட பாவியார்

உனக்குஏனம்மா இன்னுமொரு பாரதியார்
 


வேலையிலே எஜமான்

மாலையிலே உன்மான்(Man)

இப்படியே நீஏனம்மா அலைவான்

சபித்துவிடு இருவரும் தொலைவான்
 


 
இலக்கியத்தில் மட்டும்உனை பூவாய்

இல்லத்தில் எப்போதும்நீ நாராய்

மொத்தத்தில் நீபாலைவன தேராய்

எழுந்துவாம்மா ஆணுக்கு நிகராய்

 

நாட்டின் பெருஞ்செல்வம் நீயம்மா

நாவிழந்து நிற்பதுஉனக்கு தகுமா

நமக்கெல்லாம் நீதானே தாயம்மா

கூனிக் குறுகுவது நீஏனம்மா

 

விண்வெளியில் கால்பதித்தாய்

வீரமண்ணில் களம்பதித்தாய்

இன்னுமென்ன உறக்கமம்மா

கற்றுயர்ந்து ஆணையிடு ஆணையும் மிஞ்சிவிடு

 

நன்றி,

அ.பகீரதன்


Monday, February 4, 2013

சுதந்திர தினமா? அடிமை இனமா?


தமிழ்க்குடிகள்,

இருட்டறையில் இருந்து

தேசியகீதம் இசைக்கிறார்கள்-அங்கு

புனர்வாழ்வுப் பொய்யர்கள்

வெளிச்சம் பாய்ச்சுகிறார்கள்

 

தோற்றுப் போனவர்கள் பாவம்

தொலைந்தும் போனார்கள்

வென்றவர்களும் ஏனோ வெற்றிக்குள்

தொலைந்து போனார்கள்

நாற்றமடிக்கிறது தேசம்

பிணங்கள் அகற்றப்பட்ட பின்பும்…

 

தமிழ் குடிமக்கள்,

இருட்டறையில் இருந்து

தேசியகீதம் இசைக்கிறார்கள்-அங்கு

புனர்வாழ்வுப் பொய்யர்கள்

வெளிச்சம் பாய்ச்சுகிறார்கள்

 

ஜனாதிபதி உரை,

கண்ணகி போற்றப்படுகிறாள்

கற்பிற்காக அல்ல

மதுரையை எரித்ததற்காக.

மாண்புமிகு ஜனாதிபதியாம்…

 

யாழ் அரச அதிபர்….

கூடைப் பந்தாடும் குமரிகள்

கூந்தலை குட்டையாய் வெட்ட வேண்டுமாம்

குமரிகளும் குதூகலிக்கிறார்கள்…..

வெட்டப்படுவது எதுவென்று அறியாமல்

 

பள்ளியில்கூட ஈரமில்லை

பாலியலுக்காய் கண் சிமிட்டுகிறான் ஆசிரியன்

பாவம் மாணவி

புள்ளிகளிற்காய் பல் இளிக்கிறாள்

 

கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுவிட்டதாம்

கன்னிகளை தேடுகிறார்கள் இளசுகள்

சுதந்திர தேசம் மலர்ந்து விட்டதாய்….

பின்னால் பின்னப்படும் கண்ணிகளை அறியாமல்

 

மார்புச் சேலையை மறைத்து மறைத்து

நெல் குத்திய என்சகோதரி

சேலை விலக்குகிறாள்

பாவம் சோற்றுக்காய் போலும்

 

புனர்வாழ்வு எனும் குடிகாரன்

அரங்கேறுகிறான் ”சுதந்திரம்” நாடகத்தில்

நாய் வேஷம் போட்டு

நிமிர்த்தி காட்டுகிறான் நாய்வாலை

கரகோஷங்கள் நின்றபாடில்லை

 

அரசியல் வெள்ளாந்திகளே…

இராவணனுக்கு சீதை தேவையில்லை

சீதைக்கும் கற்பு பொருட்டில்லை-ஆனால்

இராமனுக்கு மனைவி தேவை

ஏன் என்றுமே புரிவதில்லை உங்களுக்கு

 

சுதந்திரம் வேண்டாம்

சிலர் கூச்சலிடுகிறார்கள்

காந்தி மீண்டும் சுடப்படுவாராம்

குரல் வெளியில் இருந்தும் உள்ளே ஒலிக்கலாம்

 

உங்கள் நேரத்திற்கு நன்றி.

அன்புடன், அ.பகீரதன்