A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Thursday, January 31, 2013

எனக்கும் ஒரு விருது!


(முத்தமிழால் எனக்கொரு விருது
தமிழ்மொழியால் வந்த விருந்து)

 விருதுகளும் பொன்னாடைகளும் மலிந்து போய்க்கிடக்கும் இன்றைய சூழலில் எனக்கும் ஒரு விருது வழங்கப்பட்டிருக்கிறது. படித்தவர்களும், அரசியல் மற்றும் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை உள்ளவர்களும் நிறைந்த ஒட்டாவா தமிழ்ச்சமூகத்தில் அறிவும் ஆற்றலுமிக்க முத்தமிழ் கலாமன்றத்தினர் எனக்கு செந்தமிழ் நாவலன் எனும் பட்டத்தை வழங்கி பெருமைப்படுத்தி இருக்கிறார்கள். புலவர் ஐயாவின் ஆசியுரையோடு காயத்திரி சுவாமிகள் டாக்டர் நரசிம்மன் அவர்களின் கையால் வழங்கப்பட்டது என் வாழ்வின் நற்பாக்கியம். எனது பரந்துபட்ட வாசிப்புக்கும், எனது பேச்சுவன்மைக்கும், எழுத்துக் கூர்மைக்கும், ஒட்டாவா தமிழ்சமூகத்தோடு கலைத் தோழமை கொண்டமைக்காகவும் நான் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம்.

என் மொழிக்காகவும் பண்பாட்டிற்காகவும் நான் செய்தவை மிகச்சொற்பம். நாடக நடிகனாக, இயக்குனராக, தரமான பேச்சாளனாக, சமூக நலன் விரும்பியாக நான் கலையோடு என்னை இணைத்துக் கொண்டாலும், தமிழ் சமூகத்திற்கு நான் செய்தவை மிகச்சொற்பம். செய்ய வேண்டியவை மிக அதிகம். காலச் சூறாவளியில் வேரோடு புடுங்கி வீசப்பட்ட மரமாக நாம் புலம்பெயர்ந்து கிடக்கிறோம்; ஆனாலும் அலையால் மீண்டும் மீண்டும் தூக்கி கரைக்கு வீசப்படும் சருகுபோல நம் கலை ஆர்வங்களும் தூக்கி வீசப்படுகின்றன. ஒரு தேசாந்திரியைப்போல என் கலைகளும் மனதளவில் அலைந்து திரிகின்றன. இறக்கி வைக்க இடம் தேடி அவை அவதிப்படுகின்றன. ஆனாலும்  தன்னை காப்பாற்றிக்கொள்ள தொடர்ந்தும் குரைத்துக் கொண்டேயிருக்கும் நாயைப்போல கலைஞர்கள் நாம் தொடர்ந்தும் குரைத்துக்கொண்டே இருக்கலாம்; குரைத்துக்கொண்டே இறக்கலாம். அறுவடையை எதிர்பார்க்காமல் விதைத்துக்கொண்டே இருக்கலாம்.

 கொஞ்சம் பின்னோக்கி பார்க்கிறேன். பல மேடைகள் ஞாபகம் வருகிறது. 15 வயதில் என் பக்கத்து கிராமத்து சிவராத்திரி விழாவில் கதாநாயகியாக பயிற்றுவிக்கப்பட்ட ஆண் இடையில் விட்டோட, அந்த வாய்ப்பு கிராமத்து எல்லைதாண்டி எனக்கு வந்தது. அது 3 மணித்தியாலய பெருநாடகம். அந்த பாராட்டுக்கள் என்னில் இப்போதும் அப்படியே புதைந்து கிடக்கின்றன. கண்ணகியாக, அரிச்சந்திரனாக……..எல்லா நினைவுகளும் பசுமையாக.கவியரங்கள் தொடங்கி………

இந்த நேரத்தில் என் கிராமத்தையும், என்மீது காழ்ப்புணர்ச்சி கொள்ளாமல், சக கலைஞன் மீது அவதூறு கொள்ளாமல் என்னை மேடைகளிற்கு தள்ளி விடுகின்ற நண்பர்களையும் நான் நன்றியுணர்வுகளோடு நினைத்துப் பார்க்கிறேன். என் ஆளுமை மீது நம்பிக்கை கொண்டு எனக்கு கோடு போடுகின்ற, என்னை விமர்சிக்கின்ற எல்லோருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள். நீங்கள் தந்த இந்த பட்டத்தை காப்பாற்றக்கூடிய அளவில் எனது பேச்சுலகமும் எழுத்துலகமும் ஆமையைப்போல மெல்ல நகர்ந்து இலக்கினை அடையும் என நம்புகிறேன்.