A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, March 30, 2012

மனச்சாட்சி


நோன்பிருக்கும் பெண்டிருக்கும்
மான்புமிகு தலைவருக்கும்
மனச்சாட்சி இல்லையென்றால்
மானிடத்தின் கதியென்ன?

எழுத்தாளன் பேனாவிற்கு
அழுத்தம் வந்தபோது
மனச்சாட்சி தோற்றுவிட்டால்
மானிடத்தின் கதியென்ன?

தொண்டனுக்கு பதவித்துண்டும்
தோழனுக்கு பணத்துண்டும்
அவசியமாய் ஆகிவிட்டால்
மானிடத்தின் கதியென்ன?

பச்சைக் கட்சியும்
வாக்குகளின் வாய்ப்புக்காய்
மரங்களை வெட்டிவிட்டால்
மானிடத்தின் கதியென்ன?

சீர்திருத்தும் சிறைக்குள்ளும்
ஆன்மீக அறைக்குள்ளும்
போதையும் போகமும் ஆகினால்
மானிடத்தின் கதியென்ன?

காந்திகளும் கத்தியெடுத்து
காமராஜர்களும் ஊழலாகி
அரிச்சந்திரர்களும் பொய்யானால்
மானிடத்தின் கதியென்ன?

விவசாயி தலைகளிலே
விலைவாசி சிலைகளாகி
உழைப்பாளி உறிஞ்சப்பட்டால்
மானிடத்தின் கதியென்ன?
 
சத்தியத்தை கைவிட்டு
சந்திரனில் கால்வைத்தும்
கருணையற்ற வளர்ச்சிகண்டால்
மானிடத்தின் கதியென்ன?

தொலைநோக்குத் தேவையாம்
தொலைத்தொடர்பு சேவையாம்
கொள்ளையரே முதலாளியானால்
மானிடத்தின் கதியென்ன?

ஆசிரியனின் பார்வையாலே
அந்தணனின் வேதத்தாலே
மாணவிக்கு களங்கம்வந்தால்
மானிடத்தின் கதியென்ன

தாய்போட்ட கணக்கினிலே
தாய்ப்பாலுக்கும் விலையிருந்தால்
தரணியிலே உயிர்வாழும்
மானிடத்தின் கதியென்ன?
 
மனச்சாட்சியை அடகுவைத்து
மானத்தை பறக்க விட்டு
மணிக்காக மணிக்கணக்காய் பணிசெய்தால்
மானிடத்தின் கதியென்ன?

மனச்சாட்சியை அடகு வையாதீர்
அதன் பெறுமதி அதிகம் என்பதற்காய்.......

நன்றி,
நட்புடன்,
அ.பகீரதன்

Friday, March 23, 2012

உயிருள்ள ரோஜா


உயிருள்ள ரோஜா ஒன்று-என்
உயிருக்குள் வீழ்ந்தாள் இன்று
அழகாலே மனசை வென்று-என்
உலகாக நின்றாள் இன்று

எல்லாமே அவளானாள்- எனக்கு
எப்போதும் தாயானாள்
உயிருக்குள் நிலையானாள்-என்
உண்மைக்கு விலையானாள்

கன்னத்தின் குழியாக-என்
எண்ணெத்தில் சுழியானாள்
காதலின் குறியீடாய்-என்
வாழ்விற்கு குறியானாள்

திறந்த மனசுடன் வாடி-உன்
பிறந்த மேனியை தாடி
ஆழ்ந்து உறங்கநான் ரெடி-நம்
ஆசை இறங்கலாம் கோடி

வாழ்க்கையொரு பொற்குகை-அங்கு
காதல்மட்டுமே இயற்கை
கட்டியணைக்கலாம் வாடிநம்
கட்டில்உடையலாம் வாநீ

இளமையொரு சொர்க்கம்-அங்குகாதல்
இல்லை என்பதே இல்லை
காதலென்பது இறைவன் தந்தது-அது
கடைசிவரைக்கும் உயிர்ப்பு தந்தது

போதை என்றால் என்ன-நீ போகும்
பாதை தான் பெண்ணே
மேதை என்றால் என்ன-வாழ்வில்
உன்காதல் தான் பெண்ணே

கடவுள் என்றால் என்ன-உன்
கனவு தான் பெண்ணே
இறைவன் என்றால் என்ன-நான்
இறக்கும்வரைக்கும் நீதான் பெண்ணே

அறிந்து கொள்ளடி பெண்ணே-உனக்காய்
அழிந்து போகவும்நான் ரெடி
மூச்சாய் இழுக்கிறேன் உன்னை-என்
முழு உலகமும் நீதான் பெண்ணே
 
உங்கள் நேரத்திற்கு நன்றி.
நட்புடன்,
அ.பகீரதன்

Friday, March 9, 2012

பயம் கொள்


அச்சம் என்பது
ஆண்மையில்லை கற்புமில்லை
ஆனாலும் கொஞ்சம் பயம்கொள்

தாயின்
தண்டனைக்கு பயப்படாதே
அன்புக்கு பயம்கொள்

மனைவியின்
கண்ணீருக்கு பயப்படாதே
கருணைக்கு பயம்கொள்

கணவனின்
கண்டிப்புக்கு பயப்படாதே
காதலுக்கு பயம்கொள்

தந்தையின்
கோலுக்கு பயப்படாதே
நாவுக்கு பயம்கொள்

குருவின்
போதனைக்கு பயப்படாதே
திறமைக்கு பயம்கொள்

நண்பனின்
பிரிவிற்கு பயப்படாதே
நட்புக்கு பயம்கொள்
 
காதலின்
முடிவிற்காய் பயப்படாதே
காதலுக்கு பயப்படு

ஆண்டவனின்
விதிமுறைக்கு பயப்படாதே
அறத்திற்கு பயம்கொள்

அறியாமையின்
மூடநம்பிக்கைக்கு பயப்படாதே
அறிவியலுக்கு பயம்கொள்

முதலாளியின்
பணத்திற்கு பயப்படாதே
கடமைக்கு பயம்கொள்

அதிகார வர்க்கத்தின்
சூழ்ச்சிகளிற்கு பயப்படாதே
சாணக்கியத்திற்கு பயம்கொள்

கனடாவின்
குளிருக்கு பயப்படாதே
குறளுக்கு பயம்கொள்

நாட்டின்
காவற்துறைக்கு பயப்படாதே
சட்டத்திற்கு பயம்கொள்

பணத்தின்
வலிமைக்கு பயப்படாதே
கடன்பட பயம்கொள்

வாழ்வின்
தோல்விகளிற்கு பயப்படாதே
தேவைகளிற்கு பயப்படு

சமூகத்தின்
ஏளனத்திற்கு பயப்படாதே
கேள்விகளிற்கு பயம்கொள்

நோயின்
அறிகுறிக்கு பயப்படாதே
வைத்தியருக்கு பயம்கொள்

முதுமையின்
வருகைக்கு பயப்படாதே
ஆரோக்கியத்திற்கு பயம்கொள்

யமனின்
கயிற்றுக்கு பயப்படாதே
உண்மைக்கு பயம்கொள்

நீ
வாழவும் பயப்படாதே
சாகவும் பயப்படாதே

நட்புடன்,
அ.பகீரதன்