A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, March 30, 2012

மனச்சாட்சி


நோன்பிருக்கும் பெண்டிருக்கும்
மான்புமிகு தலைவருக்கும்
மனச்சாட்சி இல்லையென்றால்
மானிடத்தின் கதியென்ன?

எழுத்தாளன் பேனாவிற்கு
அழுத்தம் வந்தபோது
மனச்சாட்சி தோற்றுவிட்டால்
மானிடத்தின் கதியென்ன?

தொண்டனுக்கு பதவித்துண்டும்
தோழனுக்கு பணத்துண்டும்
அவசியமாய் ஆகிவிட்டால்
மானிடத்தின் கதியென்ன?

பச்சைக் கட்சியும்
வாக்குகளின் வாய்ப்புக்காய்
மரங்களை வெட்டிவிட்டால்
மானிடத்தின் கதியென்ன?

சீர்திருத்தும் சிறைக்குள்ளும்
ஆன்மீக அறைக்குள்ளும்
போதையும் போகமும் ஆகினால்
மானிடத்தின் கதியென்ன?

காந்திகளும் கத்தியெடுத்து
காமராஜர்களும் ஊழலாகி
அரிச்சந்திரர்களும் பொய்யானால்
மானிடத்தின் கதியென்ன?

விவசாயி தலைகளிலே
விலைவாசி சிலைகளாகி
உழைப்பாளி உறிஞ்சப்பட்டால்
மானிடத்தின் கதியென்ன?
 
சத்தியத்தை கைவிட்டு
சந்திரனில் கால்வைத்தும்
கருணையற்ற வளர்ச்சிகண்டால்
மானிடத்தின் கதியென்ன?

தொலைநோக்குத் தேவையாம்
தொலைத்தொடர்பு சேவையாம்
கொள்ளையரே முதலாளியானால்
மானிடத்தின் கதியென்ன?

ஆசிரியனின் பார்வையாலே
அந்தணனின் வேதத்தாலே
மாணவிக்கு களங்கம்வந்தால்
மானிடத்தின் கதியென்ன

தாய்போட்ட கணக்கினிலே
தாய்ப்பாலுக்கும் விலையிருந்தால்
தரணியிலே உயிர்வாழும்
மானிடத்தின் கதியென்ன?
 
மனச்சாட்சியை அடகுவைத்து
மானத்தை பறக்க விட்டு
மணிக்காக மணிக்கணக்காய் பணிசெய்தால்
மானிடத்தின் கதியென்ன?

மனச்சாட்சியை அடகு வையாதீர்
அதன் பெறுமதி அதிகம் என்பதற்காய்.......

நன்றி,
நட்புடன்,
அ.பகீரதன்

No comments:

Post a Comment