A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Sunday, April 1, 2012

கால்ற்ரனில் தமிழ்க் கலைவிழா-2012

கால்ற்ரன் தமிழ் மாணவ மன்றத்தின் 24ம் ஆண்டு நிறைவையொட்டிய கலைவிழா சிறப்பாக நேற்று நடந்து முடிந்தது. கால்ற்ரன் பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் தமிழ் மாணவர்கள், எண்ணிக்கையளவில் வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கும் இன்றைய ஆண்டுகளிலும் விழாவின் ஒழுங்கமைப்பிலோ, கலை நிகழ்ச்சிகளின் தரத்திலோ சற்றும் சளைக்காமல் வெற்றிகரமாக விழாவை நடாத்தி முடித்தமை மிகவும் பாராட்டுக்குரியது.

”தூறல்” என்ற ஆண்டு மலர் நல்ல முயற்சி. பரதநாட்டியம், வில்லுப்பாட்டு, நகைச்சுவை நாடகம், இலக்கிய நாடகம் (அரிச்சந்திர மயானகாண்டம்), கவிதை, சிறுவர் நடனங்கள், சினிமாப் பாடலுக்கான நடனங்கள், பாடல்கள் என்று சிறப்பாக திட்டமிட்டு நடாத்தியிருந்தார்கள். அந்த மாணவர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். முந்தைய ஆண்டின் “CUTSA’ தலைவர் இந்த ஆண்டின் விழாவிற்கும் முற்றுமுழுதாக அர்பணிப்போடு தன்னை ஈடுபடுத்தியிருந்தது மிகவும் வரவேற்கப்படவேண்டிய, பின்பற்றப்படவேண்டிய ஒன்று.   

1988 ஆம் ஆண்டு தமிழ் மாணவர் மன்றம் கால்ற்ரன் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டு ’பரவட்டும் கலாசாரப் பண்புகள்” எனும் சுலோகத்துடன் வீறு நடைபோட்டுக்கொண்டிருக்கின்றது. எண்ணிக்கையில் ஆயிரத்தை நெருங்கும் பொறியியலாளர்கள் அடங்கலாக பல தமிழ்க் கல்வியாளர்கள் தடம்பதித்த கால்ற்ரனின் தமிழ் நீரோட்டம் சுவையானது; சமூக அக்கறையோடு அவர்கள் நடந்த பாதை வரலாற்றுக்குரியது; வெறும் கல்வியாளர்களாக மட்டும் அல்லாமல், புலம்பெயர்ந்த தமிழர்களின் கலாசார பண்பாட்டு விழுமியங்களை தாங்கிப்பிடிக்க அவர்கள் சிந்திய வியர்வை சிந்திக்கக் கூடியவை. ஒட்டாவா தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை இன்றைய அனைத்து கலாசார விழாக்களிற்கும் அத்திவாரமாக, அடிச்சுவடாக இருந்த பெருமையும் கால்ற்ரன் தமிழ்மாணவர் மன்றத்திற்கு மட்டுமே உண்டு.  

அண்மைக்காலமாக கால்றரன் – ஒட்டாவா பல்கலைக்கழகங்களிற்கு கல்விகற்க வரும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது மட்டுமல்ல, அவர்கள் கனேடிய சூழலில் பிறந்து வளர்ந்தவர்களாக இருப்பதும்தான் இன்றைய நிலை; இருந்தும்கூட நேற்று அவர்கள் நடாத்தி முடித்த கலைவிழா உயிர்ப்பூட்டமாக இருந்தது. சோரம் போகாமால், நிலைகுலையாமல் நிதானமாக அவர்களின் விழா நேர்த்தியாக இருந்தது. வெள்ளை வேட்டி, செல்லத்தமிழ், தீர்க்கமான முடிவுகள், தொலைநோக்குச் சிந்தனை, எதிர்கால கனவுகள்…..இப்படியாக அவர்கள் அங்கு பரப்பரப்பாக செயலாற்றியமை சுவாரசியமானவை; நிஜமானவை; நிச்சயமாக பாராட்டப்படவேண்டியவை.

மனிதனிற்கு சமூகப்பொறுப்பு என்பது மாணவப்பருவத்திலேயே உருவாக வேண்டும்; மாணவப்பருவத்தில் சமூகப் பொறுப்போடு உருவாகியவர்கள்தான் மிகச்சிறந்த தலைவர்களாக உருவாகி நல்ல சமூகங்களையும் உருவாக்கியுள்ளனர். இந்தச் சமூக அக்கறையை மாணவப் பருவத்தில் உருவாக்க வேண்டிய கடமை ஆசிரியர், பெற்றோர், சமூக அமைப்புகள் மற்றும் பழைய மாணவர்களிற்கு உண்டு. ஆனால் சமூக அக்கறையுள்ளவர்களாக தங்களைக் காட்டிக்கொள்பவர்கள், பழையமாணவர்களாக மோதிரத்தை தூக்கி காட்டுபவர்கள், சமூகத்தின் தூண்களாகவும் தமிழின் வேர்களாகவும் காட்ட முனைபவர்கள் பலர் நேற்றைய விழாவிற்கு சமூகம் தரவில்லை, ஒரு சிலமாணவர்கள் பொன்னான நேரத்தைச் செலவழித்து, விழுந்துபடாமல் விழா ஒன்றை நடாத்த முன்வந்து, அதை அழகாக அமைத்து, பல அமைப்புக்களோடு தொடர்புகொண்டு, விளம்பரமும் சரியாகச் செய்திருந்தபோதும் பார்வையாளர்கள் போதாமல் விழா கொஞ்சம் பின்தங்கியிருந்தது. பார்வையாளர்கள் போதாமை இந்த விழாவிற்கு பெரும்குறையாகப்பட்டது. இது சமரசம் செய்ய முடியாத பெரும் சமூகக் குறைதான். இக்குறையை உணர்ந்து அடுத்த ஆண்டு நாம் திருந்திக்கொள்வோம். அடுத்த ஆண்டு பவளவிழா, 25ம் ஆண்டுவிழா, பெரிதாக திட்டமிருக்கிறார்களாம். வாழ்த்துவதோடு நின்றுவிடாமல் செயலாற்றுவோம். வளர்ப்போம், வளருவோம்; பரவட்டும் கலாசாரப் பண்புகள்.


நன்றி,

நட்புடன்,

அ.பகீரதன்


No comments:

Post a Comment