A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Sunday, October 30, 2011

முன்னேறு( Motivation)

விதைக்கொரு விதைக்கொரு இலக்கு
விண்ணினை அடைவது அதன் கனவு
உனக்கொரு உனக்கொரு இலக்கு
உச்சத்தை தொடுவது கனவு

விளக்கினை எரிப்பதும் காற்று
விளக்கினை அணைப்பதும் காற்று
வருவதை தினமும் ஏற்று
வாழ்வினை பறை சாற்று

கனவுகள் நல்வாழ்வினை அளிக்கும்-வெற்று
கனவுகள் நல்நாளினை அழிக்கும்
கடமைகள் சுகத்தினை அளிக்கும்-வெற்று
கடமைகள் காலத்தை அழிக்கும்

அறிவெனும் கண்கொண்டு நோக்கு
அடைவது முடிவென்று தாக்கு
வாய்மை காப்பது நல்வாக்கு
வளர்ச்சிக்கு அதுவே நற்போக்கு

விழியது வழியும் நீரை
வியர்வை வழியே சிந்து
விதிதனை மெல்ல நொந்து
வழித் தடையினைத் முந்து

தினம் ஒரு தடை-நம்
இனம் ஒரு தடை
உறவொரு தடை-நம்
உறக்கமும் தடை

கோளது எதிர்ப்பினும் வீழாய்-கொடிய
நோயது தாக்கினும் மாளாய்
ஊழ்வினை உறுத்தினும் உறங்காய்-உன்
உயிரினை இழப்பினும் தோற்காய்

வாழ்வெல்லாம் தடைகள் வரினும்
வறுமையில் தினமும் விழினும்
இலக்கினை அடையும் வரைக்கும்
இமைகளை ஒருவிழி மூடாய்

நட்புடன்,
அ.பகீரதன்

Friday, October 28, 2011

”மரபுக் கணவர்”


அம்மாவை அடித்தப்போது
துடித்தவன், கை ஓங்குகிறான்
தன் மனைவிக்கு
ஆண் என்பதனாலோ?

திருமணத்தில் குனிந்தது
தவறாகிப் போனது
வாழ்க்கை முழுவதும்
எதிர்பார்க்கிறாய்

உனக்கு ஆணுறை கூட
சுமையாக இருக்கிறது
எனக்கு மட்டும்
கருக்கலைப்பா?

அழகாயிருக்கிறது
கழுத்துச் சட்டையும்
ரைற்று ஸ்கேட்டும்,
என்னைத் தவிர!

சமையலறையில் எனக்காக
நீ ஒன்றும் செய்வதில்லை.
படுக்கை அறையிலுமா?

இரவில் விஸ்கி, காலையில் பெட்கோஃப்பி
எனக்கு தண்ணீரைக் கூட-நீ
எடுத்து வருவதில்லை

சீ, நீ என்ன மனுஷன்?
என் சிரிப்புக்குக்கூட
எல்லை போடுகிறாய்

பூங்காவனத்தையா உன்னிடம்
எதிர்பார்த்தேன்
வெறும் மலரைத்தானே?

மளிகைக் கடை தெரியாது
மகளின் மார்க்குகள் தெரியாது
மணநாள் தெரியாது-தெரிந்துகொள்கிறாய்
மாதவிடாய் நாட்களை மட்டும்
 
எத்தனை ஆண்டுகள்
வாழ்ந்து விட்டாய்
என் கால்நிகத்தின்
கலர்கூடவா தெரியாது?

மாலைக்கண் நோயா?
இரவில் மட்டும்- ஏன்
தோற்றுப் போகிறாய்?

அடிக்கடி மறக்கிறாய்-உன்
மனைவி என்பதை
அடிக்கடி நிரூபிக்கிறாய்-நீ
ஆண் என்பதை

இதுவா என்சுதந்திரம்,
எனக்காக காத்திராமல்
நீ சாப்பிடலாம்

சீ, கையை எடு
நான் தூங்குகிறேன்
நான் என்ன இயந்திரமா?

பால் கொடுத்தவள் நான்
பெயர் வைத்தவன் நீ.......
விட்டுக்கொடுத்தவை ஏராளம்
விடாமல்கெட்டவையும் தாராளம்

இரவிலாவது உன்
சுயநலத்தை கழட்டிவிடு
பெண்பாவம் பொல்லாததாம்

என் பேச்சுச் சுதந்திரத்திற்கு
வாய்காரி. என்ற பட்டாபிஷேகம்
என் அழகுணர்ச்சிக்கு
ஆடம்பரமானவள்”. என்ற பொன்னாடை
போதும் நீ புரிந்து கொண்டது.

என்கரம்கோர்த்து நடந்து
எத்தனை நாள்
ஏன் விலகிப்போகிறாய்

நான் புதிய பெண்....
மரபைமீறி வெளியே வா...
நேசி, நேரத்தையாவது செலவழி

ரொம்ப வலிக்கிறது,
குனிந்தபடியே இருக்க முடியாது.
அசிங்கம், நான் நிமிர்ந்துவிட்டால்.

நட்புடன்,
அ.பகீரதன்

Thursday, October 27, 2011

ஈழத்து நாவல்கள் ஓர் அலசல் - பகுதி 2 (வேருலகம்)

இத்தொடரின் நோக்கம்: அதிகம் கண்டுகொள்ளப்படாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடக்கிறது ஈழத்து நாவல்கள். அவற்றை சீர்தூக்கிப் பார்ப்பதே இத்தொடரின் நோக்கம்.
நாவல் பெயர்: வேருலகம்

இந்நாவலாசிரியர்:
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மெலிஞ்சு முத்தன், வயது 36.
புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வருபவர்.

வெளியீடுகள்: 3 கவிதைத் தொகுப்புக்கள், ஓர் குறுநாவல்.
இது இவரது கன்னி நாவல், 60 பக்கங்களைக் கொண்ட குறுநாவல்.

கதையின் களம்:
புலம்பெயர்ந்து வாழுகின்ற ஒருவன் சொந்த மண்ணில், தான் வாழ்ந்த கடந்த கால வாழ்க்கையை அலசிப் பார்க்கின்ற ஒரு முயற்சியாக இந்த குறுநாவல் எழுதப்பட்டிருக்கிறது. ”அரிப்புத்துறைஎன்கின்ற ஓர் கற்பனைக் கிராமத்தை கதையின் களமாக உருவகித்து திமிலர் என்ற வகைக்குள் அடங்குகின்ற அந்த கிராமத்து மனிதர்களின் வாழ்வை அழகாக பதிவதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தையும் அதன் கொடூரங்களையும் கோடிட்டபடி ஓர் கடற்றொழில் செய்யும் மனிதர்களின் கதை மெல்ல நகர்கிறது. அரிப்புத்துறை என்கின்ற கிராமத்தின் வரலாற்றை அழகான கற்பனையில் நிறுத்தி, அதன் இயல்பைச் சொல்லி அங்கே வாழுகின்ற மனிதர்களின் வாழ்வியலை, வலிகளாகவும் அவலங்களாகவும் பதிவுசெய்து இருக்கிறது இந்நாவல்.

கதையின் பின்னணி:
பிரான்சு நாட்டில், மாமாவின் வீட்டில் வளரும் பவானியை உபகதாபாத்திரமாக ஏற்று புலம்பெயர்ந்த வாழ்வின் அவலங்களையும் புலம்பெயருகிறபோது ஏற்படும் வலிகளையும் பிரயாணத்தின் இடர்களையும் மேலோட்டமாக, ஆனால் அழகாக சொல்லியபடி ஆரம்பிக்கிறது நாவல். மிக இலகுவாக கைதியாக்கப்படவும் அகதியாக்கப்படவும் கூடிய ஒரு இனத்தில் பிறந்தவன்என்கின்ற சலிப்போடு முதல் அத்தியாயம் ஆரம்பிக்கிறது. அரிப்புத்துறை என்கின்ற புனைக்கிராமத்தையும் அந்த மனிதர்களின் இயல்பான வாழ்வையும் கொண்டு கதை பின்னப்பட்டிருக்கிறது. மனித இரவுகளில் கனவுகளின் பங்கு கனமானவை. கனவுகளூடாக தன் எண்ணங்களைப் பதிவு செய்கின்ற யுக்தியை இந்நாவலில் கையாண்ட விதம் வித்தியாசமானது. வாழ்வின் போக்கும் யுத்தத்தின் வலியும் கனவுகளின் சித்திரமாக நாவலின் இறுதிவரை வந்து கொண்டேயிருக்கிறது.

கதாபாத்திரங்கள்:
ஓர் இளைஞனின் பால்யப் பருவங்கள், பெரியம்மா, பெரியப்பா, கண்மணி மாமி, மாமா, மாமியின் மகள் சசியக்கா, சேமாலை அண்ணன், பக்கத்துவீட்டு பொன்னுக்கிழவி, சந்தியாக்கிழவன் என்ற உறவுகளோடு பயணித்து இயல்பான ஒரு சமூக வாழ்வை பதிவு செய்திருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகவும் இயல்பாகவும் அவர்கள் பேசுகின்ற மொழியும் வாழ்வும் தனித்துவமாகவும் இருப்பது இந்நாவலுக்கு ஓர் சிறப்பு.
·         பொன்னுக்கிழவியின் கணவன் சந்தியாக் கிழவன், ஒரு அரூபமான புள்ளியில் நின்றுதான் கதைகளைத் தொடங்குவார். அறிவுத்தளத்தில் நின்று கதைப்பதேயில்லை”  என்பதனூடாக சமூகத்தளத்திலிருந்து விலகி வாழும் ஓர் மனிதனாக சந்தியாக்கிழவன் வருகிறார்.
·         பெரியப்பா தன் மனைவிக்கு எல்லாம் தெரியும் என்று நம்பினார்”,  பெரியப்பாவின் இன்னொரு உறுப்புப் போல அவரின் முகத்தில் பீடி இருக்கும்”,
·          ”பெரியம்மா சீலை கட்டும்போது பெரியப்பா குந்திப்பிடிச்சுக் கொண்டு கொய்யகத்த இழுத்து சரி பண்ணுவார்.
·         மாமி சிரிப்பதென்பது ஆபூர்பமான விசயம்,
·         உலுந்தையின் இறங்குப் பெட்டியில் மாமியின் உட்பாவாடை இருந்தது.
·         படுக்கையிலிருந்த பொன்னுக்கிழவிக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தது பூச்சியாடு.
·         சேமாலை அண்ணன் சசியக்காவை கேட்டார், “பொம்பிளையளும் குசு விடுவினமோ”  இவ்வாறாக கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் யதார்த்தமாக நகர்த்தப்பட்டிருக்கிறது.

குறை-நிறை:
மொழியின் கனதி குறையாமல், கதையின் காத்திரம் சிதையுறாமல் நாவல் நகர்கிறது; கனவுகளூடாக கதை சொல்லும் தந்திரமும் வெற்றியடைந்து இருக்கிறது; பிரபஞ்ச தத்துவங்களும் இரசிக்ககூடியவை. புதிய நாவலாசிரியருக்குரிய தடுமாற்றம் இல்லாமல் கைதேர்ந்த மொழியாளுமையும் சம்பவங்களை வர்ணிக்கின்ற யதார்த்தமும் கைவரப்பெற்றிருக்கிறது. கதையை வாசிக்கிறபோது கதைமாந்தர்கள் மனதில் படிவதும் ஓர் கற்பனை உலகைத் தூண்டிவிடுவதும் இக்குறுநாவலின் வெற்றி எனலாம். ஓர் அதிகாலையில் அந்தக்கிராமத்து ஆண்கள் எல்லோரையும் சிங்கள இராணுவம் சுட்டுக்கொன்றார்கள் என்ற சம்பவங்கள் யதார்த்தமாக, அற்புதமாக இருக்கிறது.  பெரியம்மா கூட்டக் கூட்ட பூவரசு இலைகளை உதிர்த்த படியே இருக்கும், பொறுக்கப்படாத எருக்கட்டிகளோடு பொக்கிளிப்பான் வந்த முகத்தைப் போலக் கிடந்தது பனங்கூடல், பெரியப்பா சோம்பேறி அதுதான் மூச்சு விட அவர் முயற்சி செய்யவில்லையோ என்று தோன்றியது, விமானப் பணிப்பெண்ணைப் பார்த்தால் எங்கள் ஊர் மீன் விற்கும் திரேசக்காவிற்கு கோட்டுப் போட்டுவிட்டதைப் போல இருந்தது”. இவை போன்ற மெருகூட்டக்கூடிய சொற்பிரயோகங்கள் கலாதியானவை.  

சராசரி வாசகனுக்கு பிடிபடாத வகையில் சில குறைகள் இருக்கிறது. நாவலை அத்துமீறிய பிரபஞ்சதத்துவங்களும், தொடர்ந்து இடையிடையே வரும் கனவுகளும் கதையை புரிந்துகொள்வதில் இடையூறாக உள்ளது. கதைக்கு வெளியே போய், அப்பப்போ கனவுகளாகவும் சம்பவங்களாகவும் வருகின்ற காமக்கிறுக்கல்களை தவிர்த்து இருக்கலாம் எனப்படுகிறது. ஒருகட்டத்தில் வெறுப்பின் விழைவாக, வாழுறத்திற்கு ஒரு துண்டு நிலத்தை பிச்சை கேட்டு திரிகிற மசிராண்டி, உனக்கு கெட்ட கேட்டிற்கு ஒரு ஆண்குறியா என்று தன்னைத்தானே நொந்து கொள்வது இயல்பை மீறிய, வசனமுதிர்ச்சியின்மைபோல தென்படுகிறது. டேய் என்ன நீ கல்யாணம் முடியனடா? என பவானி கேட்பது கொஞ்சம் யதார்த்தமின்மையோ எனப்படுகிறது. உலுந்தை என்கின்ற போராளி சைக்கிளில் பொதுமகனோடு போய் இராணுவத்தின் தலையை வெட்டிவருவதும் அதற்கான விளக்கங்களும் ஆசிரியர் தடுமாறுகின்ற இடங்களாகப்படுகிறது. கணவனையிழந்த சசியக்கா இன்னொருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதும், ஓடிப்போவதும் இந்தக்கதைக்கு அவசியமில்லை எனப்படுகிறது. இருப்பினும் நாம் எல்லோரும் வாசித்து இரசிக்கக்கூடிய நாவல் இது.

நட்புடன்,
அ.பகீரதன்

Friday, October 21, 2011

காதல் பரவசம் (பகுதி 2)


பிச்சையும் எடுத்து விடுவேன்
உனக்கு சில்லறைகள் தேவைப்பட்டால்

வண்ணாத்துப் பூச்சிகளை
எனக்குப் பிடிக்கிறது
அவை உன்னைப் போல
மென்மையாக இருப்பதனால்

பிச்சையும் எடுத்து விடுவேன்
உனக்கு சில்லறைகள் தேவைப்பட்டால்

எதையும் இரவல் வாங்காதவன்
கவிதைகளைக் கூட இரவல்
வாங்குகிறேன் உனக்காக

உயிரையும் விட்டுவிடலாம்
முடியாது இருவரும் ஓருயிர்

சபரி மலையெல்லாம்
எதற்கு நீ தானே என்தெய்வம்

என் புத்தகத்திற்குள்-இப்போ
மயிலிறகு இல்லை
அங்கே உன் கூந்தல் முடி

எத்தனை தடவை
அம்மா அமுதூட்டியிருப்பாள்
அத்தனையையும் சில கச்சான்
துண்டுகளால் வென்றுவிட்டாய்

என் அறையில் இருந்த
நடிகையின் படங்களை
உடைத்துவிட்டேன் அருகதையற்றவை
உன்னருகில் இருக்க

நீ முன்பே பிறந்திருந்தால்
எடிசனுக்கு இலகுவாக இருந்திருக்கும்
மின் இழைக்கு பதிலாக
உன் கூந்தல்முடியை பயன்படுத்தியிருக்கலாம்

நியாயம்தான் உன்வகுப்பு ஆண்கள் 
எல்லாம் பரீட்சையில் தோற்றது.
பரவாயில்லை பலர்
கவிஞர்கள் ஆகியிருப்பார்கள்!

எந்த தோல்விகளிற்கும்
நான் தயார் இல்லை-இப்போ
நீயும் சேர்ந்தல்லவா
தோற்கடிக்கப்படுவாய்

உனக்கு வேறேதும் வேலையில்லையா?
எப்போதும் என் நினைவுகளோடு
கொஞ்ச நேரமாவது விலகியிரு
தாயுடன்பேச, அவள் சிலுவை சுமந்தவள்.

நீ முத்தம் தந்து
விலகிச் சென்றபோது
உன் காலடிச் சலங்கை ஒலிக்குள்
ஊசலாடியது என்உசிர்.

அம்மி, அருந்ததி, மூன்று முடிச்சு.......
அதெல்லாம் எதற்கு?
நான் முழுதாக உனை
நம்புகிறபோது.

மல்லிகைப் பூக்களை
வாங்கிவரப் போவதில்லை
உன் கூந்தலைவிட
அவை நறுமணமா என்ன?

முதலிரவெல்லாம் வேண்டாம்
ஆயுளுக்கும் உன்சிரிப்பொலிகள் போதும்
நிர்வாணம் வேண்டாம்-அது
என்காதலை கொச்சைப்படுத்திவிடும்

குழந்தையை மட்டும்
கேட்டு விடாதே-உன்
பிரசவ வலியால் நான்
இறந்து போய் விடலாம்.

குழந்தை எதற்கு? உன்காலடி
மண்கொண்டு-உனைப்போல
மலர் ஒன்றை பிரசவி
அதுபோதும் எனக்கு

தூக்குத்தண்டனையை எதிர்த்து
குரல் கொடுத்தவன்-இப்போ
தூக்குத்தண்டனை வழங்குகிறேன்
காதலிக்காத எல்லோருக்கும்.

என் இதயம்
வருடலாய் இருக்கிறது
இரு இதயங்களும்
சேர்ந்து இயங்குவதாலோ?

நட்புடன்,
அ.பகீரதன்

Wednesday, October 19, 2011

என் கவிதையை வாசித்த நண்பர்களிற்கு நன்றி

முகப்புத்தகத்தில் காதல் பரவசம்என்ற எனது கவிதையை வாசித்து, வாழ்த்திய நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள். நான் ஒரு கவிஞன் அல்ல. பல கவிதைகளை வடித்தவனும் அல்ல. ஆனால் எனது எண்ண ஓட்டங்களை ஏதோ ஒரு வகையில் பதிவு செய்யும் ஆர்வம் இருந்து கொண்டே இருக்கிறது, அதன் விளைவுதான் அந்தக் கவிதை. வாழ்வில் மனிதர்களோடு கூடிக்கழித்த பொழுதுகள் பிரசவித்த உணர்வுகளையும், வலிகளையும் பதிவு செய்யத் துடித்ததன் விளைவுதான் என் கவிதைகள். பல காலங்களாக மனதிலும் காகித்திலும் கிறுக்கி எறிந்த கவிதைகள் ஏராளம். ஆனால் நண்பர்களோடும் வாசகர்களோடும் நான் பகிர்ந்து கொண்ட முதல் கவிதை இது எனலாம். எனது எழுத்துக்களை வாய் வழியாக சிலர் விமர்சித்திருந்தாலும் எழுத்து வடிவில் எனக்கு கிடைத்த முதல் வாழ்த்துக்கள் உங்களுடையது. பதிவு செய்ய வேண்டிய பேரார்வத்தின் விளைவாக உங்களுடைய பெயர்களையும் கீழே இணைத்திருக்கிறேன். உங்கள் நேரத்தை எனக்காக செலவு செய்தமைக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

·         Aswitha Sathees

·         Jaya Kanagaratnam

·         Kama Myl

·         Lagu Arumugam

·         Koneswaran Ponnuthurai

·         Kugan Navam

·         Kokilanathan Rasiah

·         Muthukumar Murukesu

·         Mala Jeeva

·         Pageerathan Ariyaputhiran

·         Seyone Soma

·         Satheesan Nalliah

·         Siva Ruban Sivalingam

·         Sureshkumar Tharmabalasingham

·         Sivakumar S

·         Sathyanarayanan Sivadas

·         Thambirajah Kenganathan

·         Yaso Eram

·         Kapilan Ramachandran

·         Rajan Bala

·         Guna Thurairajah

·         Vasanth Balasubramaniyam

·         Lathayini Thirunavukkarasu

நட்புடன்,,
அ.பகீரதன்


Friday, October 14, 2011

காதல் பரவசம் (பகுதி 1)

மலர்களை முத்தமிடுகிறேன்
வாசனைக்காக அல்ல.
அவளின் கூந்தலில்
குடி இருந்ததனால்.

முடிந்தவரை யாரோடும்
பேசாமலிருக்கிறேன்
அவளோடு பேச வார்த்தைகள்
போதாமல் போய்விடலாம்!

கனவுகள் எல்லாம்
இப்போது காணப் பிடிக்கிறது.
அவள் இடையிடையே வந்து
கண்சிமிட்டி முத்தமிடுவதனால்.

அவள் பாதச்சுவடுகளை,
பின்பற்றியபடி நடக்கிறேன்,
முடிவில் எங்கோ அவளைக்
கண்டுவிடலாம் என்ற தவிப்பில்.

காத்திருப்புக்கள் எனக்கு
அலுப்பதேயில்லை அவள்
கட்டாயம் வந்துவிடுவாள்
என்ற கற்பனையில்

வெயில், மழை, குளிர், கொசுக்கடி
எதுவும் வலிப்பதில்லை
வலிக்கிறது அவள்
குடையின்றி நிற்கையில்

சிலவேளை வெயிலையும்
நான் இரசிக்கிறேன்
அவள் குடையோடு
வருவதனால்

செத்தவீட்டில் கூட
அழுவதில்லை அவள்
எப்போதும் என்நினைவில்
இருப்பதனால்

கிரிக்கெற், கிளித்தட்டு, கிட்டியடி..
எதுவும் விளையாடப்
பிடிப்பதில்லை அவள்
பார்வையாளராகாத பொழுதுகளில்

புத்தகங்கள் பிடிப்பதில்லை,
கணக்கு புத்தகங்களை
மட்டும் காவித்திரிகிறேன்
அவளின் கேள்விகளிற்காக

யார்மீதும் பொறாமை இல்லை
அவளுடைய நாயைத் தவிர
நான் உட்கார முடியாத இடத்தில்
உட்காந்திருக்கிறது அவள் மீது

அம்மா எனக்கு பைத்தியமாம்
நண்பன் இன்ஃபாருவேஷனாம்
மாமா எனக்கு வயசுக் கோளாறாம்
ஆசிரியர் மயக்கமாம்

இது எதுவுமில்லை அது
என் தவிப்புகளின் நிவாரணி
என் வாழ்வின் முழுமை
என் வாலிபத்தின் அழகு

இது எதுவுமில்லை அது
என்உயிருக்குள் இன்னோர்
உயிரைக் கலக்கும் விஞ்ஞானம்
இயற்கையோடு கலக்கும் மெய்ஞானம்

நான் அன்றே இறந்து விட்டேன்
அவளைப் பார்த்த பொழுதுகளில்
மீண்டும் இறந்துவிடுவேன்
அவள் பிரிகிறபோது

இரு இறப்புக்கும் இடையில்
ஓர் புதிய வாழ்க்கை
கால்கள் தரையில் படாமல்
வாழ்கின்ற ஆனந்தப் பரவசம்.

நட்புடன்,
அ.பகீரதன்


Wednesday, October 12, 2011

தொலைந்து போனவை


தாய் முலையில் முகம் புதைத்து
தாய்ப்பால் நான் குடிக்கையிலே
எம்புள்ள தாய்மொழியில்
தங்கமெடல் எடுப்பான் எண்டு
நினைத்திருப்பாள் எந்தாயி


வருசமூன்று காத்திருந்து
விசயதசமி நாள் குறிச்சு
வாழை இலையறுத்து
நல்லரிசி தடவி
நிறைகுடம் மேல் வைத்து
வெற்றிலை நுனிநறுக்கி
வெண்பா பாடிமுடித்து
அழுதபுள்ள என்கையணைச்சு
அ ஆ என்றெழுதி
ஏடு தொடக்கையிலே
அம்மாவின் தமிழ்ச்சிரிப்பு
ஆயுளுக்கும் அமுதமது.


பூவரச இலை ஒடிச்சு
புதுசாய் குழல் செஞ்சு
பிறந்த மேனியுடன்
பீப்பீ என்றபடி வட்டமிட்டு
நான் வரவே
ஆச்சி அடிச்ச தமிழ் ஜோக்கு
அப்படியே தேங்கி நிற்கும்

கோயில் விழாதனிலே
கட்டிநின்ற
வாழைக்குழையறுத்து
வழவுக்குள் மறைந்து நிக்க
கோயில் கிழவன் தந்த
வசைவரம் வார்த்தைகளாய்
அப்படியே நினைவிருக்கும்

பள்ளிக் காதலியும்
பருவத்தின் தோழியரும்
முத்துச் சொல்லெடுத்து
முத்தமாய் பொழிந்த வார்த்தை
முதுமையிலும் வந்து நிற்கும்.

அம்மாவின் தாலாட்டு
அப்பாவின் வசைமொழிகள்
குருவின் வழிகாட்டு
தோழியின் கவிதை
எல்லாமென் தாய்மொழியின்
துணை வந்தேன்

அழுகையில் தாலாட்டாய்
முதலிரவில் முனகலாய்
மரணத்தில் ஒப்பாரியாய்
தனிமையில் இசையாய்
எல்லாமும் எல்லாமென்
மொழிவழியே அடைந்தேன்.

மொழியின் வழியேதான்
மௌனத்தையும் ரசித்தேன்.
மொழியின் வழியேதான்
வாழ்வையும் கண்டு கொண்டேன்.
மொழி என் அடையாளமானது.
என் உயிருமானது

எப்போதும்
எல்லாமாக என் மொழி

என்னுலகெங்கும்,
பரந்து கிடந்த தாய்மொழி
இப்போ என்வீட்டுக்குள் கூட
முடங்க இடமில்லை.

என்தாயின் மொழி வேறு
என்மகவின் மொழிவேறு
இருவருக்கும் வெவ்வேறு உலகங்கள்
இடையில் நான் எதற்கு?

புலம்பெயர்வால் என்னிலிருந்து
தொலைந்தவை ஏராளம்
மொழி தொலைத்தது
என்னையே என்னிடமிருந்து.

அதுதான் நம் கடவுளுக்கே
வேறுமொழி ஒவ்வாதோ?

நட்புடன்,
அ.பகீரதன்