A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, September 26, 2014

அணையாத தீபம்.


 

 

சிங்கத்திடம் சிக்காத எங்கள் தங்கம்

வங்கத்தின் நச்சுவாயில் வீழ்ந்ததுவே

கட்டுவனில் குண்டுபட்டும் குலையா அவனுடல்

சொட்டுத்தண்ணி அருந்தாமல் துடித்து வீழ்ந்ததுவே

 

ஊர்கூடித் தேரிழுத்த வீதியிலே

ஊர்கூடி ஓலமிட வந்ததுவே

கந்தனை சுற்றிவந்த கூட்டமெல்லாம்

சிந்தனை மறந்து மைந்தனைச் சுற்றி நின்றதல்லோ

 

உடலுருகிச் சுருங்கினாலும் உள்ளம் உறுதிபெற

கடல்பெருகிக் கந்தனடி சேர்ந்ததுபோல்

அலை அலையாய் அறந்தமிழர் அங்குகூடி

இளந்தமிழன் இன்னுயிரை இறைகாக்க வேண்டினரே

 

அடுத்தகட்டம் என்னவென்று அனைவரும் விழித்தபோது

அண்ணல்வழியே துணைவழியென்று விழித்தவனே

வஞ்சகக் கிருஸ்ணனின் வாரிசுகள் வஞ்சிப்பார் என்றறிந்தும்

துஞ்சாமல் களம்புகுந்து அண்டைய நாட்டின் முகத்திரையை கிழித்தவனே

 

உண்ணாமல் நீகிடந்த வீதியினை

எண்ணாமல் இருக்க முடியலயே

அண்ணா அண்ணாவென அழுத முகங்கள் எல்லாம்

கண்முன்னால் வந்துநிற்க நெஞ்சுகலங்கிறதே

 

பார்த்தீபா! பார்த்தீபா

பார்த்தாயா? எங்களினம் படும்பாட்டை

என்ன சொல்ல? என்ன சொல்ல?

என்னினத்தின் நிலைதனை என்னசொல்ல?

 

புத்தி கெட்ட பிக்குவெல்லாம்

புத்தர் பெயர்சொல்லி பிழைக்கிறான்

கத்தியும் கள்ளப் புத்தியுமாய்

வட கிழக்கை கிழிக்கிறான்

 

கொப்பிழந்த குரங்குபோல

தமிழன் தாவித்தாவி தவிக்கிறான்

தனதுவளம் தமிழர்நிலம் மறந்துபோய்

தார்வீதி கண்டு மலைக்கிறான்

 

என்ன சொல்ல? என்ன சொல்ல?

என்னினத்தின் ஈனத்தினை என்னசொல்ல

நடந்ததெல்லாம் சொல்ல நாலைந்து பக்கம்வேணும்

சொல்லச்சொல்ல நம்மானம்தான் கெட்டுப்போகும்

 

தியாகங்களை மறக்காதே தமிழா!!

 

நன்றி.

அ.பகீரதன்

 

Tuesday, September 23, 2014

தமிழரின் இன்றைய நிலை


 

கண்கசியக் கனிகிறது

ஓர் கவிதை

மெய்கலங்கித் தலைப்பிட்டேன்

தமிழரின் இன்றைய நிலை

 

பண்டைய தமிழன்

பகலவனாய் ஒளிவீசிய தமிழன்

இன்றைய தமிழனோ

இருளில் மெழுகுவர்த்தியாய் சுடர்விடும் தமிழன்

 

விரும்பி விரும்பி விருந்தோம்பி

மகிழ்ந்த தமிழன்

மருந்துக்கும் உணவின்றி

மடிந்துவீழ்ந்த நிலையுண்டு

 

போராடிப் போராடி ஊட்டிவளர்த்த

பண்பாடு எனும் பெருவிருட்சம்

வேராடி வேராடி வீழ்ந்துபோகும்

பெருஞ்சோக நிலையுமுண்டு

 

கிளிபோல செல்லக்கிளிபோல

சீராட்டிப் பாராட்டிய செந்தமிழ்

சீரிழந்து சிறப்பிழந்து செம்மொழியின் வலுவிழந்து

கிளிப்பிள்ளைப்போலக் கொச்சையாய் பேசப்படும் நிலையுமுண்டு

 

சர்வதேச தலையீட்டால்

சர்வநாசம் ஆனதடா தமிழர் சேனை

சர்வநாசம் என்றெண்ணி விசுவாசம் நீயிழந்தால்

என்னாகும் நாளைய தமிழர்நிலை

 

பூம்புகார்த் தமிழனை

நம்பினோர் பலருண்டு

பூச்சாண்டித் தமிழனை

நம்ப இனியாருண்டு

 

என்நாவில் தமிழிருந்து என்ன பயன்

ஐநாவில் போய் உரையாற்ற ஒருதமிழன் நமக்கில்லை

மைனா படம்பார்த்து விட்டு

மணிக்கணக்காய் அழுகிறான் பெரியதம்பி

வைனா வொட்காவா அடுக்கிவைத்து

அழுதழுது குடிக்கிறான் சின்னத்தம்பி

 

ஒருதம்பி இல்லாத காரணத்தால்

சின்னத்தம்பி பெரியதம்பி சீரழிந்து போகிறார்

எவரைநம்பி என்ன பயன் என்றோ

தம்கடமை செய்ய தயங்குகிறார்.

 

கண்ணகியின் கற்புவேண்டாம் கம்பனின் கவிவேண்டாம்

வள்ளுவனின் வாக்கு வேண்டாம் சோழரின் வீரம் வேண்டாம்

பொல்லாத தமிழர் என்ற கொடும்நாமம் நமக்கு வேண்டாம்

வல்லவராய் நல்லவராய் வெல்லும்வரை நாமிருப்போம்

 

தமிழரின் இன்றையநிலை

அதைவிட மோசம் யூதரின் அன்றையநிலை

யூதரின் இன்றைய நிலை

அதுவே ஆகட்டும் தமிழரின் நாளையநிலை

 

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்மொழி!!
நன்றி
அ.பகீரதன்

ஆடிக் கலவரம்


ஆடிக் கலவரம்-கொஞ்சம்

ஆடிப் போனான் தமிழன்

தாயகம் நோக்கி

ஓடிப் போனான் தமிழன்

 

தமிழர் நிலமே தம்தாயகம்-என

தமிழன் தன்னிலை உணர்ந்தான்

தாயக விடுதலைப் போரில்

தன்பணி உணர்ந்தான்

 

அரசியல்வாதியும் ஆயுதப்போரின்

அவசியம் உணர்ந்தான் –பின்பு அதை

அரசியலாக்க முனைந்தான்

அநியாயமாய் தானும் அழிந்தான்

 

காணிக்கு சண்டை பிடித்தவன்

தன்வாரிசை விடுதலைத் தீக்கு

காணிக்கை செய்தான்

ஆயுதக் கைகளிற்கு அள்ளிக் கொடுத்தான்

 

விடுதலை என்பதாய்-நம்பிள்ளைகள்

ஆசைகளிலிருந்து தம்மை

விடுதலை செய்தார்

ஆருயிர் நீர்த்து அரும்பணி செய்தார்

 

சுவடு தெரியாமல் நடக்கும்-நம்தங்கைகள்

கவடு கிழித்து அங்கே

களப்பணி செய்தார்-நமக்காய்

களப்பலி ஆனார்

 

ஆடிக் கலவரம்-இன்றும்

அதே நிலவரம்

தேடிக் கொன்றனர் அன்று

வதைத்து கொல்கின்றார் இன்று

 

விடுதலை வேண்டுவார் பலர்

விடுகதையை என்பார் சிலர்

வீண்தர்க்கம் புரிவார் தன்னிலை யறியார்-

விடுதலை ஒன்றே நமக்கு நன்னிலை என யறியார்

 

இந்திய நடிகைகளை இறக்கியது போதும்-கொஞ்சம்

சிந்தித்து நடவடா தம்பி

சந்தி சிரிக்குது உன் சங்கதி அறிந்து-உன்

சந்ததிக்காக சிந்தித்து நடவடா தம்பி

 

வாழும் காலம் கொஞ்சம்-அதில்

நாளும் பொழுதும் துன்பம்

நல்லது செய்ய வாய்ப்பு வந்தால்

நல்லது என்று இன்றே செய்து முடி

 

ஒருதலைக்காதல் போல் உன்விடுதலை

ஏற்றுக்கொள்ளும்வரை பின் தொடர் தம்பி

நல்லது செய்வார் யாரென அறிந்து-அவரை ஏற்றுக்கொள் தம்பி

காற்றுவீசும் அதுவரை பொறுமை கொள் தம்பி!

 

நட்புடன்,

அ.பகீரதன்

Sunday, May 18, 2014

நினைவும் நெருப்பும்


புகழ்மாலை ஏந்தி பலர் பொதுவாழ்வில் வருவார்

நஞ்சுமாலை ஏந்தி இனி யாரு வருவார்?

சிலகால வாழ்வில் ஏனிந்த சினிமாத்தனம்

தமிழா ஏன் இன்னும் உனக்கு இந்த ஈனத்தனம்

 

வரலாறு ஒருகாலும் நிலை தடுமாறாது

வருவதை நீ தடுக்காமல் நின்றால் சரியாகாது

எதிர்த்தாளும் வல்லமை சிறு புழுவுக்குமுண்டு

எதிரியை கொல்லாமல் வெல்ல வழிபலவுண்டு

~~

இவர் படும் கஸ்ரம் அவரறியார்

அவர் படும் கஸ்ரம் இவரறியார்

யார் படும் கஸ்ரம் யார் துடைப்பார்

ஈழத்தாயின் வீட்டில் யார் துயரடைப்பார்?

 

தேவன் எதற்கு?  தேடுதல் எதற்கு?

தேவை  உனக்கு முதலில்  மனிதநேயம்

சாவை ஏற்ற சந்ததிக்காய்

சேவை கொஞ்சம் செய்யுங்கடா

 

ஆண்டவன் இல்லா ஆலயங்கள்

அடுக்கி வருகின்றாய் அடுக்கடுக்காய்

ஆளுமையுள்ள தமிழ்க் குடியே

ஆமை வேகத்திலாவது நகருங்கடா?

 

நெஞ்சில் பட்ட விழுப் புண்ணை

நெஞ்சம் உள்ளவரை மறவாதே!

நேர்மை நீதி நியாயம் எல்லாம்

உரத்து கேட்டால் மட்டுமே கிடைக்குமடா

 

நன்றி,

அ.பகீரதன்

Thursday, April 3, 2014

மனதில் பட்டது


நீதிக்கான குரல்....
உனது கருத்துக்கள் அதிகாரத்தில் இருப்பவர்களிற்கும் அருவருடிகளிற்கும் சுயநலக் கும்பல்களிற்கும் கசப்பாக இருக்கலாம்; ஆனால் அடிமட்டத் தொண்டனிற்கும் அநீதியை எதிர்த்து நிற்கும் ஏழையின் செவிகளிற்கும் இனிப்பாக இருக்க வேண்டும். சமூக நடப்பு, சாணக்கியம் என்பவற்றையும் தாண்டி சத்தியத்திற்காக உனது குரல் ஓங்கி ஒலிக்கட்டும். இந்த உலகம் பல பிரமாக்களையும், பிதாமகர்களையும் சந்தித்து இருக்கிறது. இவர்கள் நிலையற்றவர்கள். இவர்கள் எடுத்துக் கொண்ட உண்மை மட்டுமே நிலையானது. அதுவே உலகை மாற்றிய அற்புதக் கருவிகள். அந்த உண்மைதான் காந்தியாக, கார்ல் மார்க்ஸாக நமக்குப் பயன்பட்டது. சுயநல, அயோக்கியத்தனம் சார்ந்த இந்த பூமிப் பந்தை நல்வழிக்கு உருட்டும் நெம்புகோலாக உன்னால் இருக்க முடியாமல் போகலாம்; வாய்மூடி மௌனமாக நகரும் சுயநல மனித சமூகத்தை உன்னால் ஒன்றுபடுத்த முடியாமல் போகலாம்; தர்மத்திற்காக போராடும் வர்க்கத்தை உன்னால் ஒன்றிணைக்க முடியாமல் போகலாம். ஆனாலும் என்ன? காதில் விழுவதை கணக்கில் எடுக்காமல் நெஞ்சில் எழுவதை சொல். உன் வார்த்தைகளால் நீதி கிடைக்காமல் போனலாலும் கூட, அது நாளை அநீதி செய்ய இருப்பவர்களிற்கு எச்சரிக்கையாக இருக்கட்டும். கோபத்துடன் எழுபவன் நட்டத்துடன் உட்காருவான் என்று ”கோச்சடையான்” சொல்கிறது. ஆனாலும் சமூகக் கோபம் தேவையானது. நீதிக்கான உன் கோபம் தொடர்ந்து ஒலிக்கட்டும். உன் குரல்வளையை மற்றவர்கள் நெரித்தாலும் உன் குரல் ஓங்கி ஒலிக்கட்டும். தனிமனித நட்புக்களையும், கதிரை சார்ந்த இலாப நட்டக் கணக்குகளையும் தாண்டி அவை வெளியே வரட்டும். உண்மையை முதலில் அலசி ஆராய்ந்த பின்பு பேசக் கற்றுக் கொள்வோம் அனைவரும். வாழ்வின் முடிவு எல்லோருக்கும் பொதுவானது, அது மரணம் எனும் மகிமை. அதுவரைதான் நம் ஆட்டம். வயிறும் உடலும் பசிக்கும் வரைதான் வாழ்வு.......

Thursday, February 13, 2014

பாலு மகேந்திரா


 
(பாலு மகேந்திரா )
 

எழுத வேண்டும் என

எத்தணிக்கிறது என்பேனா

 

எதை எழுதுவது?

எழுதி என்னாவது?

புழுதி படர்ந்த புத்தகமாய்

என் பேனா

 

ஆற்றாமை

அழுத கண்ணீராக……

தேற்றாமை

பெரும் துக்கமாக….

 

பாலு மகேந்திரன்

எங்கள் ஈழ மகேந்திரன்

கோடாம்பாக்கமே புருவம்

உயர்த்திய வானச் சந்திரன்

 

சிறுவயதில்

தீவிர  வாசிப்பு

தீரா  வெறியோடு

சினி்மா  நேசிப்பு

 

லண்டனில் பட்டப் படிப்பு

புனேயில் சினிமாப் படிப்பு

இறுதியாய் சினிமா மட்டுமே பிடிப்பு

உறுதியாய் அதுவே சுவாசத் துடிப்பு

 

முதல் படம்

”அழியாக் கோலம்”

சினிமாவில் அவருக்கு

அழியாக் கோலம்

 

ஐந்து முறை

தேசிய விருது

அதில் இரண்டு

ஒளியமைப்பிற்காக

 

 

பிடல் காஸ்ரோவை

பின்பற்றித் தொப்பி

கடல் கடந்து சாதித்த

ஈழத்தின் சிற்பி

 

படைத்தவனே பிரமிக்கும்

பன்முக ஆற்றல் அவர்க்கு

படைத்தார் ”பாலா” க்களை

நிலைத்தார் ”சீமான்” களாய்

 

சினிமாப்

பட்டறை வைத்தார்

பலருக்கு அங்கே

முகவுரை கொடுத்தார்

 

உன் பணி தொடர

பலர் வருவார்

உன் படம் போல

இனியார் தருவார்?

 

”வீடு” படம் எடுத்தபோது

வீடுபேறு அடைந்துவிட்டாய்








விடைபெறு தந்தையே-உன்






படை  வரும் நல் படைப்புக்களாய்


 

ஆன்மா சாந்தியடையட்டும்.


 

அ.பகீரதன்

Tuesday, February 4, 2014

பலூனின் சுதந்திரம்


காற்றடைக்கப்பட்ட பலூன்

ஊசிக்காக காத்துக் கிடக்கிறது….

 

ஊசிகள் சில இன்னும்

தூண்டில் ஊசிகளாக

 

ஊசிகள் சில இன்னும்

தாசிகளின் மேற்சட்டையில்

 

ஊசிகள் சில இன்னும்

விருந்தாளியின் பல் இறுக்குகளில்

 

பார்வைக்கு

அழகாகத் தெரியும்

பலூனிற்குள் காற்றின் சுதந்திரம்

கேள்விக்குறி யாக்கப்படுகிறது?

 

பலூன் ஊதப்படுகின்றது

குழந்தைக்கு கும்மாளம்

ஊதியவனிற்கு சிம்மாசனம்

காற்றிற்கு மட்டும் அவமானம்

 

காற்றின் துணையோடு

பலூன் பறக்கிறது

பலூனிற்கு சுதந்திரம்

காற்றிற்கு நிர்ப்பந்தம்

 

காற்றின் துணையோடு

பட்டம் பறக்கிறது

பட்டத்திற்கும் கொண்டாட்டம்

காற்றிற்கும் விடுதலை

 

பட்டம் கயிறிடம்

சுதந்திரத்தை இழந்து கிடக்கிறது

காற்றிற்கு விடுதலை வழங்கிவிட்டு

 

பட்டத்தின் பெருந்தன்மை

பலூனிற்கு இல்லை

அதுதான் பட்டம் உயரப் பறக்கிறது

பலூன் தாழப் பறக்கிறது

  

காற்றிற்கு புரியவில்லை

பலூனின் பலவீனம்

 

பலூன் சூம்பிக் கிடப்பதாய்

ஒப்பாரி வைக்கின்றன ஊசிகள்

 

காற்றடைக்கப்பட்ட பலூன்

ஊசிக்காக காத்துக் கிடக்கிறது

 

ஊசிகளோ

சல்லாரி அடிப்பவர்களால்

நாதஸ்வரத்தில் தொங்கிக் கிடக்கிறது

 

காற்றின் சுதந்திரமே நம்சுவாசமாய்

சுதந்திரம் கேள்விக் குறியாகும்போது

சுவாசமும் தடைசெய்யப்படலாம்

Sunday, February 2, 2014

கனடாவின் தலைநகரில் தைப்பொங்கல் விழாவும் தமிழ் மரபுத் திங்களும்


கனடாவின் தலைநகராகிய ”ஒட்டாவா(Ottawa)” நகரில் முத்தமிழ் கலாமன்றம் பொங்கல் விழாவை வருடா வருடம் மாபெரும் நிகழ்வாக கொண்டாடி வருகின்றது. புலம்பெயர்ந்த வாழ்விலும், தமிழரின் மொழி, கலை, கலாசாரம், பண்பாடுகள் சார்ந்த வாழ்வியலை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்வதே இந்த விழாவின் பிரதான நோக்கமாக இருந்து வருகின்றது; அதில் வெற்றியும் அடைந்துள்ளது. “புலம்பெயர்ந்தவர்கள்” என்ற வரையறைக்குள் தங்கள் வாழ்வைச் சுருக்கிக் கொள்ளாமல் தங்களையும் தங்கள் மரபு சார்ந்த பின்புலங்களையும் வளப்படுத்திக் கொள்வதில் தமிழருக்கு நிகர் எவருமில்லை. கனடாவில் மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் வாழுகின்றார்கள்; இவர்களில் பெரும்பான்மையானவர்கள் என்பதுகளின் மத்திய பகுதிக்குப் பிற்பாடு வந்து குடியேறிவர்கள். குடியேறிய இவர்கள் கடந்த முப்பது ஆண்டுகளில் கடின உழைப்பாலும் ஊக்கத்தாலும் அறிவியல், பொருளாதாரம் மற்றும் பண்பாடு ரீதியாக எட்டிப் பிடித்திருக்கும் உயரம் மிகப்பெரியது; பிரமிப்பானது; மலைக்கத் தக்கது. இந்த வளர்ச்சிப் பாதையின் சிறுகூறாக, முத்தமிழ் கலாமன்றத்தின் பெருமுயற்சியால் தை மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக ஒட்டாவா நகர அரசும் அறிவித்திருப்பது இவ்வாண்டின் இனிப்பான பொங்கல் செய்தியாகும்.  

ஒட்டாவா வாழ் தமிழர்களின் முயற்சியின் விளைவாக இவ்வாண்டிலிருந்து சனவரி மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக(Tamil Heritage Month) ஒட்டாவா நகர அரசு அறிவித்திருக்கின்றது. தமிழர்கள் தங்களின் மொழித்தோன்றல், வழித்தோன்றல், கலை, இலக்கியம், ஆன்மீகம், கலாசாரம், பண்பாடு, அரசியல் மற்றும் வரலாற்றின் பெருமைகளையும் விழுமியங்களையும் தங்கள் குழந்தைகளிற்கு மட்டுமல்லாது கனடாவில் வாழும் பிற இனத்தவர்களிற்கும் எடுத்துச் சொல்வதற்கான வாய்ப்பாக இந்த அங்கீகாரம் அமைந்திருக்கின்றது. தமிழ் மக்கள் செறிவாக வாழும் நகரமாகிய ”மார்க்கம்(Markham)” நகரசபை முதலாவதாக 2011 மார்கழியில் தமிழ் மரபுத் திங்களை ஏற்றுக்கொண்டது. இதன் தொடர்ச்சியாக பல நகர அரசுகள் ஏற்றுக்கொண்டன. இந்த அங்கீகாரத்தை மாகாண, மத்திய அரசுகள் ஏற்றுக் கொள்வதற்கான பெருமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகளின் முக்கிய கர்த்தாக்களாக இருந்த அரசியல் பிரமுகர்கள் நீதன் சான்(Nethan Shan), லோகன் கணபதி போன்றவர்களும் மற்றையவர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

கனடா பல்லினங்கள் வாழுகின்ற நாடு; பாகுபாடுகளின்றி பல்கலாசாரங்களை வரவேற்கின்ற, ஊக்குவிக்கின்ற அரசு. இதை தங்களிற்கு அனுகூலமாக எடுத்துக் கொண்டு தமிழர்கள் மொழி சார்ந்து, பண்பாடு சார்ந்து தங்களை நிலைநிறுத்திக் கொள்வதில் மாபெரும் வெற்றி அடைந்து வருகின்றார்கள். மொழியும், மொழி சார்ந்த பண்பாடும் காப்பற்றப்படவேண்டும் என்பதில் புலம்பெயர்ந்த பெரும்பாலான தமிழர்கள் மிகவும் ஜாக்கிரதையாக உள்ளனர். ஈழத்திலோ அல்லது தமிழ் நாட்டிலோ இருக்கும் தமிழ் குழந்தைகளின் தமிழர் சார்ந்த ஆளுமைகளிற்கு நிகராகவோ அல்லது மேலாகவோ புலம்பெயர்ந்த தமிழ்க் குழந்தைகளின் தமிழர் சார்ந்த ஆளுமைகள் உள்ளன. பரதநாட்டியம் தொடங்கி தமிழ் சினிமாவரை அவர்களிற்கு அத்துபடி; மீன்குழம்பு தொடங்கி பணியாரம் வரை நன்றாக இறங்கும். செந்தமிழ் அவர்களால் பேச முடியாவிட்டாலும் புரிந்து கொள்ள இயலும். இளையராஜாவின் இசை தொடங்கி பவர் ஸ்ரார் வரை அவர்களால் விமர்சனம் செய்ய முடியும். திருவள்ளுவர், ஔவையார், கம்பன், பாரதி போன்றவர்கள் தமிழ் வளர்த்த பெரியவர்கள் என்பது புரியும். விரும்பியோ விரும்பாமலோ வழிபாட்டுத் தலங்களிற்கு போகிற பண்பாடு அவர்களிடம் உண்டு. கால ஓட்டத்தில் இவையாவும் கரைந்து, கலைந்து போய்விடும் என வெட்டியாக வாதிடுவோர் இருக்கவே செய்வார்கள். நாம் இருக்கும்வரை நம் விழுமியங்களோடு வாழ்வதும், அதற்காக இயன்ற முயற்சிகளை எடுப்பதும் நமக்கு எந்த வகையிலும் தீங்கன்று.

ரொறன்ரோவின் இடியப்ப கடை தொடங்கி நியூயோர்க்கின் வோல்(Wall street) வீதி வரை தமிழன் கால்பதிப்பதை, வரலாறு கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றது. பில்கேட்ஸ் அளவுக்கு பணம் சம்பாதிக்க முடியாவிட்டாலும் கணணித்துறையில் பில்கேட்ஸ் அளவுக்கு வளர்ந்தவர்களில் பல தமிழ்ப் பெயர்களுமுண்டு. வடஅமெரிக்காவின் தொழிநுட்ப வளர்ச்சியில் தமிழ் மூளைகளிற்கும் பெரும்பங்குண்டு. புண்ணுக்கு மருந்து கட்டவே வசதியற்ற பிரதேசத்திலிருந்து வந்த தமிழர்கள் புற்றுநோய்க்கு மருந்து கண்டு பிடிக்கும் அணிக்கு தலைமை தாங்குகின்ற மேலான கல்வியறிவுமுண்டு. ரொறன்ரோவில் வீதிக்கு வீதி கோயில் இருப்பது மட்டும் தமிழனின் கால்தடங்கள் அல்ல, அரசியல், பொருளாதார வெளியில் அவனுடைய பங்களிப்பு பெறுமதிமிக்கவை. ”ஒற்றுமையில்லாத் தமிழன்” என்று கிண்டலடித்தவர்களிற்கு சவாலாக, ஒரு தமிழச்சி கனடா நடுவண் அரசில் எம்.பி யாகி பாராளுமன்றம் சென்ற வரலாறும் இங்குண்டு.

செந்தமிழ் வீசிய தேசத்தில் தமிழ் இன்று கிண்டல் மொழியாக சினிமாவில் சித்தரிக்கப்படுவது காலத்தின் நியதியாகி இருக்கலாம்; நவீனமும் கணணியும் தமிழ்மொழியின் வீச்சை குறைத்துப் போகலாம்; சொந்த நாடில்லா மொழி என்பதால் மாற்றான் காலடியில் கசங்கிப் போகலாம்; போற்றப்பட வேண்டிய சங்க இலக்கியங்கள் கிராமத்துக் கடைகளில் சீனிச்சுருள்களாக மாறலாம். சந்தானத்தின் சினிமாத் தமிழும் இணையங்களில் உலாவரும் சிறுபிள்ளைத் தமிழும் தான் எங்கள் தமிழ் என்று எதிர்கால சந்ததி புரிந்து, தங்களிற்குத் தாங்களே கறை பூசிக் கொள்ளலாம்; லகர, ளகர, ழகர வேறுபாடுகள் புரியாமல் எழுத்தாளர்களே குழம்பிப் போகலாம். எது எப்படி மாறினாலும் நமது வாழ்வில் தமிழ் மணம் எப்போதும் கமழ்ந்து கொண்டே இருக்கவேண்டும். கோட் சூட்டிற்குள்ளிருந்தும் ஒரு வேட்டியின் வாசம் வரவேண்டும். ”நான் தமிழன்” என்று சொல்ல ஒவ்வொரு தமிழனும் பெருமைப்படும்போது இவை சாத்தியமே. தீட்டப்படாத எந்தக் கூரிய வாளும் காலஓட்டத்தில் வெறும் இரும்புதான். கரும்பாக இருந்தாலும் உபயோகிக்கப்படாமல் கிடந்தால் துரும்புதான். போற்றப்படாத எந்த மொழியும் காலவோட்டத்தில் அழிவுதான். மந்திரமும் கிரகமும் தமிழனின் மண்டையிலிருந்து போகும்வரை சில சமூகப் புரட்சிகள் சாத்தியமல்ல. இந்தத் தொல்லைகளிருந்து விடுபடப்போகும் அடுத்த தலைமுறை மொழிசார்ந்து, இனம் சார்ந்து பேரெழுச்சி கொள்ளும் என்பதில் ஐயமில்லை. உலகமெங்கும் வாழும் தமிழ்ச் சிறார்கள் எடுக்கும் இப்படியான தமிழ் விழாக்களே இதற்கு சான்று பகர்கின்றது. சோரம் போவதும் சோர்ந்து போவதும் தமிழன் அப்பப்போ சந்தித்த நிகழ்வுகள்தாம். மாறாக, ஒவ்வொரு தடவையும் அவன் விழித்தெழுந்து, வீறுநடை போட்ட, வரலாறுகள் நிறையவே உண்டு. பணம் என்னும் அளவுகோல்தான் காலம் காலமாக வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கின்றது. ஆனாலும், பண்பாடு எனும் தளத்தில் முகவரியோடு நிற்கும்போது மட்டுமே அது அழகு பெறுகிறது. கொண்டாடப்படவேண்டியவை நம் தற்காலிக வெற்றிகள் மட்டுமல்ல; நம் மூதாதையரின் பொக்கிசங்களுமே.

ஆக்கம்: அ.பகீரதன்