A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, January 20, 2012

மௌனம்


செத்தவீட்டில் கூட
அழ மறுக்கிறார்கள்
எங்கள் ஒப்பாரிகளை
எங்கே ஒப்புவிப்பது?

முதலிரவில் கூட
பேச மறுக்கிறார்கள்
எங்கள் உணர்வுகளை
எங்கே கொட்டுவது?

பள்ளியில் கீதம்
கோயிலில் தேவாராம்
மரணத்தில் சுண்ணக்கல்
மௌனத்தில் என்னாகும்

கடவுளின் மௌனம்
பக்தனுக்கு பெருலாபம்
காதலனின் மௌனம்
காதலிக்கு பெருநட்டம்

படுக்கையறை மௌனம்
பலகோடி லாபம்
சிநேகிதியின் மௌனம்
சிந்தித்தால் சலனம்

ஆசையின் மௌனம்
அறியாமையின் மௌனம்
ஆற்றாமையின் மௌனம்
வாழ்வின் துர்சாபம்

அடக்கத்தின் மௌனம்
ஆளுமையின் மௌனம்
அறிவுமுதிர்ச்சியின் மௌனம்
வாழ்வின் பெருவரம்

பேரழகின் மௌனத்தை
பேரறிவின் மௌனத்தை
பேரன்பின் மௌனத்தை
பேசாமலே ரசித்துவிடு

மௌனத்தின் மொழியாலே
மனத்தை நீயாளு
மௌனத்தை கலைத்து
சமூகத்தில் நீவாழு

பாரதியின் குரலால்
பாவேந்தன் குரலால்
சமூக வேசதாரிகளை
சாவதமாய் கிழித்துவிடு

உங்கள் நேரத்திற்கு நன்றி.
நட்புடன்,
அ.பகீரதன்

No comments:

Post a Comment