A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, February 17, 2012

எங்கே விடுதலை?


விதைப்பை சிறைப்பை யானதால்
விந்தை உயிர்ப்பாய் விடுவித்தேன்
கருப்பை சிறைப்பை யானதால்
பிறப்பை சிறப்பாய் வருவித்தேன்

தாயின் மடியணை சிறையானதால்
தரையில் பாதம் பதித்தேன்
தந்தையின் கைப்பிடி சிறையானதால்
சிந்தையில் தனிவழி நடந்தேன்

வீடே பெரும் சிறையானதால்
வீதியில் விழிகளை தரித்தேன்
வீதியில் விதிகள் சிறையானதால்
விதிமீறி சிறகினை விரித்தேன்

கல்வியில் பாடங்கள் சிறையானதால்
பள்ளியில் பெருவிடு முறையானேன்
குருவின் போதனை சிறையானதால்
குருகுல வாழ்வைத் துறந்தேன்

தனிமையின் பிடியில் சிறையானதால்
காதலின் கனிவில் கசிந்தேன்
கனவின் பிடியில் சிறையானதால்
காதலை கணவனாய் இணைத்தேன்

கணவனும் ஒருவகைச் சிறையானதால்
காலமும் தனிக்கைதியாய் வாழ்ந்தேன்
கட்டிலும் ஆதிக்க சிறையானதால்
கட்டி அணைக்கவும் தவிர்த்தேன்

வேரும் கிளையும் சிறையானதால்
விழுதுகள் தாங்கி நிமிர்ந்தேன்
விழுதுகள் தனிச் சிறையானதால்
முதுமையை மனதினில் உணர்ந்தேன்

இளமை காலத்தின் சிறையானதால்
மூப்பினை வாழ்வில் அடைந்தேன்
மூப்பும் இயலாமையின் சிறையானதால்
மரணத்தில் நான் விழுந்தேன்.

உங்கள் நேரத்திற்கு நன்றி,
அன்புடன்,
அ.பகீரதன்

No comments:

Post a Comment