A.Pageerathan

எனது கைவண்ணம் ஓர் மழலை மொழி. இங்கே இரசனைகளிற்கும்.... ஏன் தவறுகளிற்கும் கூட வாய்ப்பிருக்கின்றது.

எனது எழுத்துலகம், கூழாங் கற்களை வைத்து கோபுரம் கட்டும் கனவு; சுள்ளிகளை வைத்து சித்திரத்தேர் செய்யும் பேரவா; சிறு உளி கொண்டு பெரும் சிற்பத்தைச் செதுக்கலாம் என்ற தன்னார்வம்; பனையிலே ஏறி நிலாவைத் தொட்டு விடத் துடிக்கும் மகா துணிச்சல்; எண்ணங்களையும் வாழ்வனுபவங்களையும் வார்த்தைகளாக கோர்க்கும் வித்தை. இங்கே, விதைப்பது மட்டுமே என் நோக்கம், அறுவடை பற்றிய அங்கலாய்ப்பு எனக்கில்லை.

எனது பார்வை, மௌனத்தின் ஊடாக உலகை நான் கண்டு கொண்ட அறத் தரிசனம்; நான் அழுவதும், சிரிப்பதும், மன வலியால் வெகுண்டு எழுவதுமாய் எனக்குள் நானே நிகழ்த்திய யாகம்; வாசிப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதுமாய் நான் எனக்குள் செய்து கொண்ட அகத்தவம்.
எனது தேடல்,
இந்தப் பிரபஞ்சத்தை போல பரந்து விரிந்து கிடக்கிறது; நான் தேடி அடைந்ததோ சிறு துளி, என் உயிரணுவைப் போல. தேடத் தேட அறிந்தவையெல்லாம் சிறுத்துக் கொண்டே போகிறது; அறிய வேண்டியவையோ பெருத்துக் கிடக்கிறது. அ.பகீரதன்

Pageerathan@gmail.com

Friday, November 4, 2011

தெய்வீகக் காதல் (பகுதி 1)


நானொரு விடுகதை
நீயொரு  புதுக்கதை
இருவரும் தொடர்கதையானோம்

நானொரு வல்லிசை
நீயொரு மெல்லிசை
இருவரும் நல்லிசையானோம்

நானொரு வழி
நீயொரு வழி
நாமிருவரும் தனிவழியானோம்

உன்விழியில் நான் விழ
என்விழியில் நீ விழ
இருவருமாய் விழிமூடினோம்

நாவிழி மூடி
ஈருயிர் கூடி
ஓர் உறவாகினோம்

ஒருநொடிப் பொழுதில்
இளமையைத் திருடி
நிலை தடுமாறினோம்

தாயைப் போலொரு
தரணியில் மேலொரு
புதிய உறவாகினோம்

காமத்தில் ஒருதுளி
காதலில் பலதுளி
கற்பனை உலகினை அடைந்தோம்

ஆலயம் தருகின்ற
ஆயிரம் அமைதியை-வெறும்
வீதியில் அடைந்தோம்

ஆரமுதம் தருகின்ற
அறுசுவை மிகுதியை
வெறுமையில் அடைந்தோம்

அழகிய இசை தரும்
உயரிய உணர்வினை-வெற்று
வார்த்தையில் அடைந்தோம்

ஈருடல் இணையும்
இயற்கையின் இன்பத்தை-வெறும்
பார்வையால் அடைந்தோம்

ஒரு வரி பேசி
இருபொருள் அடைந்து
முத் தமிழானோம்

வாழ்வொரு தவமென
நாமொரு சுகமென-சில
நிமிடத்தில் அறிந்தோம்

நதிதனில் ஓடும் நிலவினைப் போல
வாழ்க்கை அழகென உணர்ந்தோம்
அது நிலையென அலைந்தோம்

கால்தனை வருடும்
கடலலை போலே-இன்ப
மோகத்தை அடைந்தோம்

நாளென்ன பொழுதென்ன
நிலவென்ன இருளென்ன
இருவரும் பிரிவினை வெறுத்தோம்

ஊரது பகைத்தால்
உறவது எதிர்த்தால்-கொடிய பிரிவெனில்
சாவினை நினைத்தோம்

ஊழ்வினை
வருத்தம்
ஒராயிரம் வறுமை
உறவினில் ஊடல்
ஏழ்வினை சூழினும்
நாம் பிரிவினை நினையோம்.

நட்புடன்,
அ.பகீரதன்

No comments:

Post a Comment